ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளி ஒருவரின் சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்ற திருடனை சிசிரிவி காணொளிக் கமெராவின் உதவியுடன் திருடப்பட்ட சைக்கிளையும் கைப்பற்றியதோடு திருடனையும் ஞாயிற்றுக்கிழமை 22.10.2017 கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த எம். முஹம்மது சாலி (வயது 75) என்ற வயோதிபரின் சைக்கிளே திருடப்பட்டிருந்தது.
தனது உடல் அசௌகரியத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மிச்நகர் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் சென்றிருந்த சமயம் நோட்டமிட்டுக் காத்திருந்த திருடன் வயோதிபர் சைக்கிளை வைத்து விட்டு வைத்தியசாலைக்குள் உள் நுழைந்ததும் உடனடியாக சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்றுள்ளான்.
இந்தக் காட்சிகள் சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருந்தன.
திருடனை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டிருந்தனர்.
இதனை வைத்து விவரம் தெரிந்தோர் சம்பந்தப்பட்ட நபர் ஐயங்கேணியைச் சேர்ந்தவர் என பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
சைக்கிள் திருடனை நீதிமன்றில் ஆஜராக்க பொலிஸார் முயற்சி மேற்கொண்டுள்ளதோடு குறித்த நபரால் வேறேதும் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளனவா என்ற விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment