25 Oct 2017

முன்மொழிவுகள் சம்பந்தமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தறிக்கை மட்டக்களப்பு பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் சமீபத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் தமது கருத்தறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை புதன்கிழமை 25.10.2017 மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமாரவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில்  அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) என்ற பெயரில் புதிய பிரதேச சபை ஒன்றை நிறுவுதல், கோறளைப்பற்றுத் தெற்கு (கிரான்) என்ற பெயரில் பிரதேச சபையொன்றை நிறுவுதல், காத்தான்குடி நகரசபையைப் பிரித்து மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் போன்ற 03 முன்மொழிவுகள் தொடர்பிலான கருத்துரைகள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கான இறுதித் தினம் புதன்கிழமையோடு (25.10.2017)  முடிவடைந்தது.

இதேவேளை, புதிய பிரதேச சபைகள் அமைப்பது தொடர்பான முன்மொழிவுகள் எதிர்வரும் 01ம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு தகவல்கள் சேகரித்து அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: