கிழக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 2483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அபாயகரமான ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் பாவினையால் ஏற்பட்டுள்ள அபாயங்களின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்திலும் போதைப் பொருள் குற்றங்கள் பற்றி அவர் விவரம் வெளியிட்டார்.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தை நோக்குமிடத்து போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த மாவட்டத்தில் 1110 பேரும், அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 696 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 677 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொதுவாக சிறுவர்களே போதைப் பொருளின் இலக்காகக் கொள்ளப்படுவதாகவும் போதைப் பொருளுக்கு இலக்காக்கப்படும் சிறுவர்களின் இந்த அபாய வயதெல்லை கடந்த காலங்களில் 15 என்ற மட்டத்திலிருந்து தற்போது 11 வயது என்ற மட்டத்திற்கு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப் பொருள் அபாயம் குறித்து பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட சமூக நல அமைப்புக்கள், மற்றும் ஆர்வலர்களும் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments:
Post a Comment