18 Jul 2017

முரண்பாடுகளுக்கு உடன்பாடுகாண்பதில் சர்வமத செயற்பாடுகள் பெருந்துணை புரியும் தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளர் ஆர். மனோகரன்

SHARE
நாட்டில் பெரும்பாலானோர் ஏதாவதொரு மத நம்பிக்கையைச் சார்ந்தவர்களாக இருப்பதால் நீண்டகாலமாக நாட்டில் நிலவி வருகின்ற முரண்பாடுகளுக்கு சகிப்புத் தன்மை மூலம் உடன்பாடு காண முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பு நம்புவதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் செவ்வாயக்கிழமை  (18.07.2017) இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த ஒன்று கூடல் செயலமர்வில் சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் தேசிய சமாதானப் பேரவையின் அலுவலர்களும் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன்@ முரண்பாடுகளும் அதன் பின் தொடர் விளைவாக வன்முறைகளும் உருவாவது இயல்புதான்.
ஆயினும், கருத்துப் பகிர்வு, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, கௌரவம், மதிப்பளித்தல் மற்றும் ஆன்மீக செயற்பாடுகள் என்பனவற்றிற்கு ஊடாக வன்முறைகளையும் அழிவுகளையும் தவிர்த்து அனைவரும் சமத்துவமாக அஹிம்சை வாழ்வு வாழலாம்.

சமாதானத்தை தோற்றுவிப்பதில் சர்வமத செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.

நீண்ட நெடுங்கால பிணக்குகளுக்கும் ஆன்மீக அறநெறிச் செயற்பாடுகளின் மூலம் ஆயுதப் பிரயோகமின்றி இரத்தமின்றி அழிவுகளின்றி வெற்றி கண்டு விடலாம்.
காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் விளைவாக உருவாகின்ற முரண்பாடுகளை சாதகமான முறையில் முறியடிப்பதற்கும் சர்வமத செயற்பாடுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பரஸ்பர நட்புறவுடன் வாழும் அந்யோந்யமிக்க சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் தூண்டி விடப்படும் பொழுது அதனால் எல்லோருமே பாதிக்கப்பட வேண்டி வரும்.

அந்த நிலைமை இனியும் தொடர மத நம்பிக்கை வைத்திருக்கின்ற நாம் இடமளிக்கக்  கூடாது. கடந்த கால வன்முறையின் விளைவாக ஏற்பட்ட இழப்பு அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பயன்மிக்க, பெறுமதி மிக்க பாடங்களை பிரயோகித்து இனிமேலும் அழிவுகள் வராமல் பாதுகாக்க சர்வமத ஒன்றியம் பாடுபடும்.

இந்த விடயத்தில் மதத் தலைவர்கள் சிறந்த மத விழுமியக் கொள்கைகளை கடைப்பிடிக்க மக்களைத் தயார்படுத்துவதோடு வன்முறையற்ற சகிப்புத் தன்மையுடனான வாழ்க்கை வழிமுறைகளையும் கடைப்பிடித்தொழுகத் தயார்படுத்த வேண்டும். ;”என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: