ஏனைய தொழில் துறைகளில் திட்டமிடல் இருப்பதுபோல விவசாயிகளும் தமது எதிர்கால செயற்பாடுகள்பற்றி நன்கு திட்டமிட்டு செயற்பட்டால் விவசாயத்துறையில் அமோக வெற்றியை அடைந்து கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விதை நெல் அறுவடை விழா கரவெட்டி முள்ளாமுனை கண்டத்தில் செவ்வாய்கிழமை (18.07.2017) பிற்பகல் இடம்பெற்றது.
விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்@ பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதை நெல் சுத்திகரிப்பு இயந்திரத்தை நன்கு பராமரித்துப் பயன்படுத்தி விவசாயிகள் உச்சப் பயனைப் பெறுவதுடன் தரமான விதை நெல்லையும் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.
வழிமையாக இப்பிரதேசங்களில் உற்பத்தியாகும் நெல்லை இடைத்தரகர்களின் ஊடாக குறைந்த விலைக்கு விற்பதையே விவசாயிகள் காலாகாலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
எனவே, இடைத் தரகர்களின் ஊடாக விற்பனை செய்யாமல் அதனை சரியான முறையில் விதை நெல்லாகப் பதப்படுத்தி விதை நெல் கிராக்கி ஏற்படுகின்ற காலங்களில் விற்பனை செய்யும்போது கூடிய இலாபத்தினை அடையமுடியும்.
மட்டக்களப்புப் பிரதேசத்திலும் தரமான விதை நெல்லை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், பொதுவாக வெளிமாவட்டங்களிலிருந்தே விதை நெல்லை எதிர்பார்க்கின்றனர். இந்த விழிப்புணர்வற்ற மனநிலை மாற்றப்பட வேண்டும்.
ஒருபோகத்தில் அறுவடை செய்த நெல்லை அரைகுறை விலையில் இடைத்தரகரூடாக விற்று விட்டு அடுத்த போக நெற்செய்கைக்கு மிகக் கூடிய விலை கொடுத்து தரமற்ற நெல்லினங்களை கொள்வனவு செய்யும் நடைமுறை விவசாயிகளிடையே இருந்து வருகின்றது.
நமது பிரதேச விவசாயிகளாலேயே இந்த நிலைமை நமது விவசாயிகளுக்கே ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது.
இந்த விடயத்தைப் பற்றி நாம் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும் எதிர் காலத்தில் விவசாயிகளிடத்தில் இவ்வாறான விழிப்புணர்வற்ற நிலை இருக்கக் கூடாது.
ஏனைய தொழில் துறையில் திட்டமிட்டு அவர்கள் செயற்படுவதுபோல் நமது விவசாயத் தொழிலிலும் நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டியது அவசியம்” என்றார்.
விவசாயப் போதனாசிரியர் கே. லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர் ஏ.டபிளுயூ. எம். சிபான், கரடியனாறு விவசாய விதை அத்தாட்சி பிரிவு உத்தியோகத்தர், விவசாய அமைப்புக்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment