யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவையாகிப்போன நிலையிலும் ஆடு மேய்க்கும் கூலித் தொழிலை மேற்கொண்டு தனது பிள்ளைகளை பல்கலைக்கழக உயர் கல்வி வரைக் கொண்டு சென்ற குடும்பத்தின் சுய தொழில் வாழ்வாதாரத்திற்காக 4 ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டதாக முனைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.
ஆடுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 27.06.2017 மட்டக்களப்பு வாகரை – கதிரவெளியில் மேற்படி பெண்ணின் வசிப்பிடத்தில் இடம்பெற்றது.
இதன்போது குட்டிகளை ஈனும் நிலையிலுள்ள சுமார் 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 4 நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த யுத்தத்தின்போது கணவனை இழந்த நிலையில் ஆடுகள் மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு வரும் மூன்று பிள்ளைகளின் தாயான புலேந்திரன் லெட்சுமி என்பவரின் குடும்பத்திற்கே இந்த ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதான உழைப்பாளியான தனது கணவனை யுத்தத்தில் இழந்ததன் பின்னர் தான் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்தபோதும் தனது பிள்ளைகளை பல்கலைக் கழகப் படிப்பு வரை கற்பித்ததாக அவர் கூறினார்.
அதன்பிரகாரம் தனது மூத்த மகள் பல்கலைக்கழக மாணவியாகவும், மற்றைய மகன் உயர்தரத்திலும், மூன்றாவது மகள் சாதாரண தரத்திலும் கல்வி கற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.
ஆடுகள் வழங்கும் நிகழ்வில் முனைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார், உப தலைவர் ஜீ. ஜீவேந்திரன் ஆகியோர் பயனாளியின் வீட்டுக்குச் சென்று வழங்கி வைத்துள்ளனர்.
தனக்குக் கிடைக்கப்பெற்ற இந்த உதவி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் முனைப்பு நிறுவனத்தின் இவ் உதவினை தான் சரியான முறையில் பயன்படுத்தி அதனூடாக ஆட்டுப் பட்டி ஒன்றை உருவாக்கி முன்மாதிரியாகக் காட்ட உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தனக்கு இந்த மாபெரும் உதவியைப் புரிந்த புலம்பெயர் சமூகத்துக்கு தான நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment