14 Apr 2017

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் துப்பாக்கி சூடு மற்றும் கைகலப்பு நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் புதன் கிழமை (12) இரவு 09மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


பனையறுப்பான் காளி கோயிலின் பூசகர் கந்தப்போடி புனிதநாதனை குறி வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பூசாரி வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்லும் போதே வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலே குறித்த துப்பாகிச்சூடு இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பூசகர் தெய்வதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம், நடைபெற்று சுமார் இருபது நிமிடத்தின் பின்னர், சூட்டுசம்பவத்திற்கு இலக்கான பூசகரின் குடும்பத்திற்கும், பொலிஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள குடும்பத்திற்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பில் நால்வர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அச்சம்பவத்தில் இன்னுமொரு மோட்டார் சைக்கிளும் கொடாரியால் கொத்தப்பட்டுள்ளது.

காயங்களுக்கு உள்ளானவர்கள் நால்வரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட விசேட தடயப்பிரிவு பொலிஸாரும், குற்றப்புலானய்வு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு குறித்த பூசாரியின் முச்சக்கரவண்டி பனையறுப்பான் காளிகோயில் முன்பாக வைத்து இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 









SHARE

Author: verified_user

0 Comments: