1 Jan 2017

மட்டக்களப்பில் மாபெரும் “எழுக தமிழை” புத்nழுச்சியுடன் நடத்த ஆதரவுக் கோரிக்கை

SHARE
உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டக்களப்பு நகரில் ஜனவரி 21ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் “எழுக தமிழ்” எனும் உரிமையை உரத்துக் கேட்கும் நிகழ்வுக்கு அணி திரளுமாறு புத்தாண்டு தினத்தில் அறைகூவல் விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ. வசந்தராசா ஞாயிறன்று (01.01.2017) தெரிவித்தார்.

உரிமையை மறுக்கும் இனவாதத்திற்கெதிராக ஒன்றுபட வேண்டும் என்ற அழைப்பை விடுப்பதாகத் தெரிவித்த வசந்தராஜா, மேலும் கூறியதாவது@ உரிமைக்காக
சலுகைகளை மறுத்து கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாகப் போராடி, ஆயுதப் போராட்டம் மௌனித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆயினும், ஜெனீவா தொடங்கி சர்வதேசம் வரை எமது உரிமைக்கான குரல் உரக்க ஒலித்தும் ஸ்ரீலங்கா அரசு இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்கத் தயாரில்லாத இந்த நிலைப்பாட்டை முறியடிக்க “எழுக தமிழ்” போராட்டம் தேவையாகவுள்ளது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழர் தாயகம் என்பதுடன், சுயநிர்ணயத்துடனான சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், தமிழர் தாயகத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரியும், யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலை என்பனவற்றுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என உலகிற்கு வலியுறுத்தியும், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், தமிழ் பேசும் மக்களுக்கெதிரான அரசியல், சமூக, பொருளாதார தொழில் வாய்ப்பு ரீதியான ஒடுக்கு முறைகளுக்கெதிரான கண்டனங்கள் உட்பட இன்னும் பல விடயங்களை வலியுறுத்தியும் இந்த “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, தமிழ் பேசும் மக்களின் உரிமையைப் பிரகடனம் செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் மௌனத்தைக் கலைத்து உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு இந்தப் புத்தாண்டு முதல் தினத்தில் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: