மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான சிவில் சமூக அமைப்பொன்று வியாழக்கிழமை (12.01.2017) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்தின் பொருளாதாரம் கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டு இந்த சிவில் சமூக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் வடிவேல் சக்திவேல் தெரிவித்தார்.
வெல்லாவெளி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற புதிய சிவில் சமூக அமைப்பின் கூட்டத்தில் நிருவாக அலுவலர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் சமூக சேவகருமான வடிவேல் சக்திவேல் தெரிவு செய்யப்பட்டார்.
சிவில் சமூக அமைப்பின் பிரதித் தலைவராக மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ. பேரின்பநாயகம், இணைத் தலைவர்களாக பாடசாலை அதிபர்களான எஸ். சிவபாதம், ரீ. திருவருட்செல்வன், ஆகியோரும் செயலாளராக சமாதான நீதிவான் ரீ. சிவபாதம், பொருளாளராக சமூக வலுவூட்டாளர் கே. ஜதீஸ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்இணைச் செயலாளர்களாக வெளிக்கள அலுவலர் ஏ. தயாபரன், மற்றும், எஸ். கோகிலாதேவி ஆகியோரும் செயற்பாட்டுக் குழுத் தலைவர்களாக, முகாமைத்துவ உதவியாளர் எம். பேரின்பராசா, ஆசிரியர் ஆர். கோணேஸ்வரன்;, இணைப்பளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. வேதநாயகம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
16 பேர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வமைப்பின் ஆலோசகர்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், வெல்லாவெளி பொதுசுகாரா வைத்திய அதிகாரி, போரதீவுப்பற்று பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேச சபைச் செயலாளர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தலைவர், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment