அரசியல் அமைப்பு மாற்றம், வடக்கு கிழக்கு மாகாணங்கள்
இணைப்பு விவகாரம், எல்லை மீள் நிர்ணயம் உட்பட பல்வேறு மாற்றங்களுக்கான நகர்வை நோக்கி
சம கால அரசியல் சென்று கொண்டிருப்பதால்
எதிர்வரும் சமீப காலங்களில் பல சவால்களுக்கு
நாம் முகங் கொடுக்க வேண்டி வரும் என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட
சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாதாந்த ஒன்று கூடலும்
"பல்வித செயற்பாடுகளினூடாக மோதல் நிலைமாற்றத்திற்கான முன்னெடுப்பு" எனும்
தலைப்பிலான செயலமர்வும் கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் வியாழனன்று (12.01.2017)
இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த
ஒன்று கூடல் செயலமர்வில் சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும்
தேசிய சமாதானப் பேரவையின் அலுவலர்களும் பங்குபற்றினர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன்@ அரசியல் மாற்றங்கள்
ஏற்படும்போது அதன் விளைவாக உருவாகின்ற முரண்பாடுகளை சாதகமான முறையில் முறியடிப்பதற்கு
இப்போதிருந்தே சிவில் சமூகங்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும் என்ற அடிப்படையில்
வருமுன் காப்பதே புத்திசாலித் தனமாகும்.
கடந்த காலங்களில் சிவில் சமூகம் தங்களைத் தயார் படுத்திக்
கொள்ளாமல் இருந்ததனால் ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம்.
குறிப்பாக சக சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் தூண்டி விடப்படும் பொழுது அதனால் உள்ளுர்
சமூகங்களே அதிகமதிகம் பாதிக்கப்பட்டன.
அந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. கடந்த யுத்த கால
இழப்பு அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட பயன்மிக்க, பெறுமதி மிக்க அனுபவங்களின் அடிப்படையில்
சமூகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை சிவில் சமூகம் ஆக்கவூர்வமாகக் கையாள்வதற்கு
வழிவகை கண்டாக வேண்டியது காலத்தின் தேவையாகும்.
குறிப்பாக இந்த விடயத்தில் மதத் தலைவர்கள் சிறந்த மத
விழுமியக் கொள்கைகளை கடைப்பிடிக்க மக்களைத் தயார்படுத்துவதோடு வன்முறையற்ற சகிப்புத்
தன்மையுடனான வாழ்க்கை வழிமுறைகளையும் கடைப்பிடித்தொழுகத் தயார்படுத்த வேண்டும்.
இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கு
சர்வமத செயற்பாட்டாளர்கள் சிறந்த பங்காற்ற முடியும் என்பதும் யதார்த்தமாகும்” என்றார்.
0 Comments:
Post a Comment