6 Dec 2016

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரக் கதைகளை நாம் சீர்தூக்கிப் பார்த்து அதற்குப் பரிகாரம் கண்டாக வேண்டும். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பி. சுவர்ணராஜா

SHARE
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரக் கதைகளை நாம் சீர்தூக்கிப் பார்த்து அதற்குப் பரிகாரம் கண்டாக வேண்டும் என மேல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுவர்ணராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05) இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் இந்த உண்மை கூறும் அமர்வில் முன்வைக்கப்பட்டன.

மேல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுவர்ணராஜாவைத் தலைவராகக் கொண்ட இந்த அமர்வின் நிறைவில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்து கொண்டபின் அவர் தொகுப்புரை வழங்கினார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்@ 
போர் என்று வந்தாலே அதனால் பேரழிவுகள்தான் மிஞ்சும்.

போரின் மூலம் நீதி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. போரின் போது  அநேகமாக அநீதிதான் நடக்கும்.

வன்முறையாளர்கள் தாங்கள் விரும்பிதை விரும்பியபடி செய்து விட்டு இழப்புக்களையும், அழிவுகளையும் ஏற்படுத்துவதற்கான ஒரு வாசலைத்தைத்தான் போர்ச் சூழல் திறந்து விடுகின்றது.

இந்தியாவின் அசோக சக்கரவர்த்தி போரின் விளைவுகளை நேரடியாகக் கண்டறிந்த பின்னர்தான் ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

போர் எப்படிப்பட்ட பின் விளைவுகளைத் தரும் என்பதை இலங்கையர்களாகிய தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரும் நன்கு அனுபவித்து அறிந்து வைத்திருக்கின்றோம்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரக் கதைகளை நாம் சீர்தூக்கிப் பார்த்து அதற்குப் பரிகாரம் கண்டாக வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அறிந்து உணர்ந்து அவதியுற்றதை அனுபவமாகக் கூறுகின்றார்கள். அதுதான் போர் ஏற்படுத்தியுள்ள அடையாள ஆதாரம். 

என்றாலும், நடந்த சம்பவங்களை நடந்தவையாக வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொடூரங்கள் நடக்கா வண்ணம் நாம் வழிவகைகளைச் செய்தாக வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்.

அவர்கள் மன நிலையாலும், உடல் நிலையாலும், பொருளாதார இழப்புக்களாலும் பாதிக்கப்பட்டு கதியற்றிருக்கின்றார்கள். 

உயிரிழப்புக்களை ஈடுசெய்ய முடியாதென்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படக் கூடிய பொருளாதார உதவி என்பது அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும்.

இந்த விடயத்திலே அரசு அக்கறை காட்டுவதற்காக பொறுப்புள்ள அதிகாரிகள் பொறுப்பணர்வோடு தங்களது கடமையைச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் விடயத்திலே பொடுபோக்காக நடந்து கொள்வது அவர்களை மேலும் மேலும் துயரத்திற்கு உள்ளாக்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை மாத்திரம் திரும்பத் திரும்பக் கேட்பதால் மட்டும் எதுவும் நடந்து விடப் போவதில்லை.

இந்த விடயத்தில் எல்லோரும் உதவ வேண்டும். இனிமேலும் இந்த நாட்டில் இன வன்முறைகளாலோ அல்லது வேறேதும் வன்முறைகளாலோ இழப்புக்கள் ஏற்படாமல் இருக்க வழிவகை கண்டாக வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: