ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு டிசெம்பெர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் மேலும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் அறுவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (டிசெம்பெர் 14, 2016) ஆஜர் செய்யப்பட்டனர்.
மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail
Muhammath Rizvi முன்னிலையில் சந்தேக நபர்கள் நிறுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் நீடிப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் இச்சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜராக்கப்பட்ட வேளையில் வழமை போன்று நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

0 Comments:
Post a Comment