மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா மற்றும் களுவன்கேணிக் கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மீனவர்கள் கடந்த மூன்று நாள்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (29.11.2016) தமது வழமையான மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை (25.11.2016) பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவர் உயிருடனும் மற்றையவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் மீனர்கள் சடலங்கள் கண்டு பிடிக்கப்படும் வரை தமது மீன்பிடியை நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்களும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதிலிருந்து விலகி தமது தொழிலைக் கைவிட்டிருந்தனர்.
தமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்ற மரபு பேணப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சிவதர்ஷன் எனும் மாணவனின் சடலம் திங்களன்று காலை கடலில் தென்பட்டதைத் தொடர்ந்து அதனை மீனவர்கள் மீட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment