தாயையும் மகளையும் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வரை ஓயப்போவதில்லை. உன்னத பொலிஸ் சேவையைப்பற்றி பொதுமக்கள் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
ஏறாவூரில் இரட்டைப் படுகொலை நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர் பொலிஸ் தரப்பில் குற்றவாளிகளைப் பிடிக்க எடுக்கப்பட்டு வரும் பொலிஸாரின் பிரயத்தனங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 14, 2016) இடம்பெற்றது.
அங்கு சமூக ஆர்வலர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க@ சம்பவம் நடைபெற்று அதுபற்றிப் பொலிஸார் அறிந்து கொண்ட கணப்பொழுதிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலிருந்தும் விஷேட பொலிஸ் அணிகள் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் பணிப்பின்; பேரில் இரவு பகலாக தங்களை கடமையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
பொலிஸார் பசி தாகம், களைப்பு, உறக்கம் பாராது தங்களை அர்ப்பணித்து இந்தக் கடமையில் ஈடுபடுபட்டுள்ளார்கள்.
இதுவரையில் அவர்களது அர்ப்பணிப்பின் காரணமாக இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேபோன்று பொலிஸாருடன் சேர்ந்து பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டும்.
சம்பவம் தொடர்பான பின்னணிகள், தடயங்கள், சான்றுகள் எதுவாக இருந்தாலும் அதனைப் பொதுமக்கள் பொலிஸாருடன் பகிர்ந்து கொண்டால் அது குற்றவாளிகளை தப்பவிடாமல் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பேருதவியாக அமையும்.
இந்த விடயத்தில் பொதுமக்கள் தாங்கள் ஒதுங்கியிருப்போம் என்று ஒரு போதும் நினைத்துவிடக் கூடாது.
தகவல்கள், விவரங்கள், பின்னணிகள், சான்றுகள் தடயங்களை அறிந்துள்ள பொதுமக்கள் அவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ அன்றேல் அநாமதேயமாகவோ பொலிஸாருக்குத் தெரியப்படுத்த முடியும். நீங்கள்தான் இந்தத் தகவலை வெளியிட்டீர்கள் என்ற விவரம் ஒரு போதும் வெளியிடப்படாது இரகசியம் பாதுகாக்கப்படும்.
உண்மையை மறைத்து குற்றவாளிகளைத் தப்ப விடுவதால் எமது எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படுவதோடு சட்டமும் ஒழுங்கும் சீர் குலையும். அவநம்பிக்கையும் அச்சமும் பீதியும் ஏற்படும். எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களை ஒதுங்கியிருக்க வேண்டாம் என நாம் உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏறாவூர் மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தைப் போக்க எம்மாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்” என்றார்.
சம்பவம் நடைபெற்றதின் பின்னர் இரவு வேளைகளில் மக்கள் மத்தியில் ஒருவித பாதுகாப்பற்ற அச்ச உணர்வு குடிகொண்டுள்ளதால் அதனைப் போக்கும் விதமாக பொலிஸாரின் இரவு நேர ஊர் உலாவை அதிகரிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கைக்குப் பணிப்புரை விடுப்பதாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க உறுதியளித்தார்.
இந்த பாதுகாப்பு கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியடசகர் தம்மிக தயானந்த, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் பல்வேறு சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாய் நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த ஞாயிறன்று அதிகாலை பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment