12 Jun 2016

மட்டக்களப்பில் அளவுக்கதிகமான மதுபான சாலைகள் வேண்டாம் - (கி.மா.உ.) பிள்ளையான்

SHARE

மட்டக்களப்பில் அளவுக்கதிமான மதுபான சாலைகள் வேண்டாம் என கேட்டுக் கொள்ளும் கடிதமொன்றை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு   மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்படி கடிதத்தில் நீதிபதி முன்னிலையில் ஒப்பமிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும்  பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு சனிக்கிழமை 11.06.2016 அனுப்பி வைத்துள்ளார்.


அந்தக் கடிதத்தில் அவர் மேலும் எழுதியுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை பகுதியில் மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
  
வர்த்தமானி அறிவித்தலின்படி மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் சுமார் 82 மதுபான சாலைகளே இருக்க முடியும் என வரையறுக்கப் பட்டுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 62 மதுபான சாலைகளுக்கு மேல் உள்ளன.

யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளாலும் பெரும் பாதிப்புக்களை சந்தித்து, நாளாந்தம் தமது வாழ்வாதார மீட்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் இப்பிரதேசத்தில் மதுபான வடிசாலை அமைக்கப்படுமானால் மதுபான விற்பனை விரிவாக்கல் செயற்பாடுகளில் மூலம் மதுபான விற்பனையாளர்களுக்கு அதிகூடிய சலுகைகள் கிடைத்து மாவட்டத்தின் மதுபான விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்குமே தவிர ஒட்டு மொத்தத்தில் இந்தப் பிரதேசம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும். இது மட்டக்களப்பு மாவட்ட மக்களை 'இரவில் வெட்டிய குழியில் பகலில் தள்ளுவதற்கு’’ ஒப்பானதாகிவிடும்.

மதுபானத்தால், இளம் சந்ததியின் கல்வி பாதிக்கப்படுவதோடு குடும்ப வன்முறை, பாலியல் குற்றச் செயல்கள், கொலை மற்றும் இன்ன பிற சமூக முறைகேடான நடவடிக்கைகளும் இடம்பெறும்.

இதற்கு எதிராக  பொது அமைப்புக்களும் மக்களும் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில் இன்னும் புதிதாக மதுபான சாலைகளை அமைப்பதால் மேலும் பாரதூரமான அழிவின் விளைவுகள் ஏற்படும்.

உரிமை கேட்டுப் போராடிய தமிழ் சமூகம் இப்பொழுது மதுபானசாலை அதிகரிப்பால் உணர்விழந்து பொருளாதார, கல்வி, கலை, கலாசார, விளையாட்டு, பாரம்பரிய விழுமியங்களை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பரிதாபகரமான நிலை நோக்கி நகர்வதனை தடுக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி அக்கறையுள்ள தரப்பினர் கவனமெடுக்க வேண்டும்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: