கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 35 பள்ளிவாசல்களுக்கான இப்தார் நிகழ்வு நிகழ்ச்சி நிரலில் திங்கட்கிழமை ஏறாவூர் மீராகேணி மக்கள் எழுச்சிக் கிராமத்தில் முதலமைச்சரின் இணைப்பாளர் யூ.எல். முஹைதீன் பாவா தலைமையில் ஸம்ஸம் பள்ளிவாசலில் இப்தார் இடம்பெற்றது.
அங்கு ஜமா அத்தார் மத்தியில் மௌலவி பரீட் தொடர்ந்து சன்மார்க்கப் பிரசங்கம் நிகழ்த்துகையில், இந்த உலகிலுள்ள ஆடம்பரங்களும் சுகபோகங்களும் எமது மறுமை வாழ்வை சீரழித்து விடக் கூடாது.
இவ்வுலக வாழ்வு என்பது ஒரு சோதனைக் களம். இது மறுமைக்குரியதை பயிர் செய்ய வேண்டிய இடமாக உள்ளது.
இதனை நாம் மறந்து இவ்வலுக இன்பத்தில் மூழ்கி மறுமையின் முடிவற்ற இன்பத்தை இழந்து விடக் கூடாது.
நஷ்டவாளிகளான மனிதன் தான் இறைவனின் கட்டளைகளைப் புறந்தள்ளியது பற்றி மூன்று இடங்களிலேதான் சிந்தித்து உணர்ந்து கொள்கின்றான். ஆயினும் அந்த மூன்று இடங்களிலும் மனிதனுக்கு வரும் ஞானம் பிரயோசனமற்றது.
அது அவனைக் காப்பாற்றப் போதுமானதல்ல. அந்த ஞானம் மனிதனுக்கு அந்த மூன்று சந்நதர்ப்பங்களுக்கும் முன்னதாக ஏக வல்லவனும் கருணையாளனுமாகிய அல்லாஹ் கட்டளையிட்டு கால அவகாசம் கொடுத்திருந்த போது வந்திருக்க வேண்டும்.
முதலாவது நஷ்டவாளியான மனிதன் தனது மரணத் தறுவாயிலே கைசேதப்படவேண்டி வந்து விடுகின்றது.
இன்னும் கொஞ்சக் காலம் என்னை இவ்வுலகில் வாழ விடு இறைவா அப்பொழுது நான் அதிகமதிகம் நன்மைகளைச் செய்தவனாக உன்னைச் சந்திக்கிறேன் என்று ஆதங்கப்படுகின்றான்.
இந்த அவலக்குரல் எடுபடப் போவதில்லை.
இரண்டாவது மஹ்ஷருடைய நேரம், ஏக வல்லவனான அல்லாஹ் வானத்தையும் பூமியையும் சுருட்டி மலைகளைப் பஞ்சு போன்று ஆக்குகின்ற போது மனிதன் அல்லாஹ்வுக்குப் பயந்து அங்சி நடுங்கியவனாக மன்றாடுகின்றான். ஆயினும் இதுவும் காலங்கடந்த ஞானம்தான். இந்த வேளையில் அல்லாஹ்வை அஞ்சி நடுங்கும் மனிதனின் அவலக் குரலும் அபயமளிக்கப் போவதில்லை.
மூன்றாவது நரகத்திலே உழலும்போது அல்லாஹ்வின் மகத்துவத்தை மனிதன் உணர்ந்து கொள்வதோடு தான் நிரந்தர நஷ்டவாளியாகி விட்டதையும் எண்ணி அலறுகிறான், அபயம் கோருகின்றான், துடிக்கிறான் துவழுகிறான்.
எனவே, இவைகளெல்லாம் கருணையாளனான அல்லாஹ் நமக்கு போதியளவு கால அவகாசம் தந்தும் அதனை நாம் கணக்கிலெடுக்காது விட்டதனால் ஏற்பட்ட நஷ்டங்களேயன்றி வேறில்லை.
எனவே, மரணம் என்பது நம்மை எப்பொழுதும் அணுகலாம். அதனை விட்டு வெருண்டோட முடியாது. அந்த மரணம் நம்மைச் சூழ்ந்து கொள்ளுமுன் நாம் நன்மைகளை பயிரிடுவோம். அதன் பலாபலனை மறுமையில் அடைந்து கொள்வோபம் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு நமது வாழ்நாளையும் விட அதிக வருடங்கள் கொண்ட சிறப்பான அந்த கண்ணியத்திற்குரிய லைலத்துல் கத்தர் இரவைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.
0 Comments:
Post a Comment