17 Sept 2015

கண்காட்சியும் விற்பனையும்

SHARE
கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண விவசாயிகள், கைப்பணியாளர்கள், மீன் வளர்ப்போர், கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து நாளை மறுதினம் 19 ஆம் திகதிவரை காலை 9.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது. புதிய நெல் இனங்கள் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர்கள், விவசாய இரசாயன மற்றும் பசளை வகை, விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திர வகை, உயிர்வாயு உற்பத்தி, பாற்பண்ணை முகாமைத்துவம், கால்நடைத் தீவனம் மற்றும் புல் உற்பத்தி, கோழி வளர்ப்பும் முட்டை உற்பத்தியும், மீன்பிடி உபகரணங்களும் செயற்பாடுகளும், அலங்கார மீன் வளர்ப்பு முறைகள், கூட்டுறவுத்துறைச் செயற்பாடுகள், நவீன விவசாய நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள் என்பன இந்தக் கண்காட்சியில் இடம்பிடித்திருக்கின்றன.

மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், மாகாணசபை உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, ஆர். துரைரெத்தினம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

SHARE

Author: verified_user

0 Comments: