24 Feb 2015

கிழக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

SHARE
கிழக்கு மாகாண விசேட  ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட் கிழமை  (23) திருமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக புத்தசாசனம் பொது நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளுராட்சி ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜெயசூரியவும், காணி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவும் கலந்து கொண்டார்கள்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தசாசனம் பொது நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளுராட்சி ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் மக்கள் தேவைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இவ்விசேட கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும்  ஏனைய சமூக பொருளாதார புள்ளிவிபர தரவுகள் இதன் போது குறித்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாம் வடக்கு, மத்திய, மற்றும் மேல் மாகாண சபைகளுக்கு விஜயம் மேற்கொண்டு 100 நாள் வேலைத்திட்டதின் கீழ் குறித்த மாகாணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாகவும் அதன் தொடராக கிழக்கு மாகாண விஜயம் அமைந்ததாகவும் பொது நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளுராட்சி ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜெயசூரிய இதன் போது தெரவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்தி சுதந்திரமானதும் சுயாதீனதுமான ஒரு அரச சேவையை கட்டியெழுப்பி பொது மக்களின் தேவைகளை கிரமமான முறையில் நிவர்த்தி செய்வதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன் அரசியல் கட்சி இனப்பாகுபாடின்றி வளப்பங்கீடு மற்றும் ஏனைய சகல விடயங்களிலும் சாதாரணமான ஒரு முறையை பொறிமுறையை பின்பற்றுவது தமது நோக்கு என்றும் அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

ஊழல் மிக்க ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கே தாம் முன்னைய அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிரணியினரோடு சேர்ந்து கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றதாகவும் ஆனால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும் இதன் போது காணி காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.

உயிரை பணயம் வைத்து தான் குறித்த முடிவை நாட்டு நலன் கருதி எடுத்ததாகவும் கடந்த அரசாங்கம் பொது மக்களின் பணத்தை தமது சொந்த நிதியைப்போல் பயன்படுத்தியதாகவும் காணி உறுதிகள் சாதாரண மக்களுக்கு அல்லாமல் பிற தரப்பினருக்கு வழங்கப்பட்டதாகவும் இதன் போது காணி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமது சொந்த இடங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருப்பின் உரிய சான்றுகளுடன் தனது அமைச்சின் செயலாளரிற்கு சமர்ப்பிக்குமாறும் இதன்போது அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன கேட்டுக் கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் மக்கள் பிரதிநிதிகளினால் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பொதுவான விடயங்கள் தொடர்பான கருத்துக்களும் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மீள் குடியேற்றம் தொடர்பில் தமது அரசாங்கம் உயர் கவனத்தை செலுத்தியுள்ளதாக இதன் போது அமைச்சர் கரு ஜெயசூரிய கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் திரு.தண்டாயுதபானி கேட்ட கேள்விக்கு பதிலளித்ததுடன் அவர்களது தேவைகள் மற்றும் மனவேதனைகளை தாம் உணர்ந்துள்ளதாகவும் இதன்போது  அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. சரத் அபேகுணவர்த்தன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,  பிரதேச செயலாளர்கள்,  உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

trinco sp 2

trinco sp 3
SHARE

Author: verified_user

0 Comments: