15 Jan 2015

நல்லிணக்கம், ஒற்றுமையின் மூலமே அவநம்பிக்கைகளை அகற்ற முடியும் - பாப்பரசர் பிரான்சிஸ்

SHARE
நல்லிணக்கம், சமாதானம் ஒற்றுமையின் மூலமே கடந்த கால இழப்புகளையும் அவநம்பிக்கைகளையும் சரி செய்ய முடியும் என பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்தார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மீள்கட்டுமான செயற்பாடுகளில் சமய மரபுகள் முக்கியமான பங்களிப்பைச் செலுத்துவது அவசியமெனவும் பாப்பரசர் தெரிவித்தார்.
இலங்கை நீண்டகால உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாற்றம் பெற்று அமைதியான சூழல் நிலவுகிறது. மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள், அவநம்பிக்கைகளை நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மூலமே சரி செய்ய முடியும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.
இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாப்பரசர் நேற்றைய தினம் (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அரச வரவேற்பு நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், ஆயர்கள், மதத்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாப்பரசர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை அரசாங்கம் வழங்கிய வரவேற்பு தொடர்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடன் சில நாட்களுக்கு தங்கியிருக்கக் கூடியதொரு சந்தர்ப்பமாக இந்த விஜயத்தை நான் பார்க்கின்றேன். இலங்கை அழகிய நாடு. இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கிறது. மக்கள் ஐக்கியம் மற்றும் கலாசார, மத மரபுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடு.
ஜனாதிபதி அவர்களே, புதிதாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்புக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை வரவேற்பதற்கு வந்திருக்கும் அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் மதத் தலைவர்களின் வருகைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது இந்த விஜயம் வெற்றியளிப்பதற்கு உதவியவர்களுக்கும், எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அன்பு மற்றும் விருந்தோம்பலுக்கு இதய பூர்வமான நன்றிகள்.
கத்தோலிக்க தேவாலயங்களின் உலக தலைவர் என்ற ரீதியில் எனது இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இந்தத் தீவில் உள்ள கத்தோலிக்கர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபடவுள்ளேன். கிறிஸ்தவ தொண்டு மற்றும் மக்களுக்கு மதிப்பளித்த அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனித நிலைக்குத் திருநிலைப்படுத்துவது எனது இந்த விஜயத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். கத்தோலிக்க தேவாலயங்கள் இலங்கையில் உள்ள மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறது என்பதையும் எனது விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
உலகில் பல்வேறு சமூகங்கள் தமக்கிடையில் யுத்தம் புரியும் ஒரு வருந்தத்தக்க நிலை தொடர்கிறது. வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளை சரிசெய்ய முடியாமை, பழைய அல்லது புதிய மத மற்றும் இன ரீதியான முரண்பாடுகள் போன்றனவே வன்முறைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
இலங்கை நீண்டகாலமாக உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். எனினும் இந்த வடுக்கள் ஆறி தற்போது அமைதியானதொரு சூழ்நிலை காணப்படுகிறது. மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள், அவநம்பிக்கைகள் என்பவற்றிலிருந்து உடனடியாக மீள்வது இலகுவானதல்ல. நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையின் மூலமே இவற்றிலிருந்து விடுபட முடியும்.
ஆற்றுப்படுத்தலானது பழைய காயங்களைக் கிளறுவது போலன்றி உண்மையான நோக்கத்திலானதாக அமைய வேண்டும். இதற்கு சமாதானம் மற்றும் ஒற்றுமை அவசியமானது.
நண்பர்களே, இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க மற்றும் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் அனைத்து சமய மரபுகளும் முக்கியமான பங்களிப்புச் செய்ய வேண்டும். இதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து, ஒரே நிலையில் செயற்பட வேண்டும்.
அனைவரும் தமது கருத்துக்களை, நிலைப்பாடுகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை சுதந்திரமாக வெளியிடக் கூடியதாக இருக்க வேண்டும். இதில் மிகவும் முக்கியமான விடயம் ஒருவருடைய கருத்தை மற்றையவர் மதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருடைய சொல்லை மற்றையவர் பணிவாக, வெளிப்படையாக செவிமடுத்தால் அவர்களின் மதிப்பு மற்றும் அபிலாசைகள் என்பன உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு நடந்துகொண்டால் பல்வகைத்தன்மைக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் ஏற்படாது. இதன் மூலம் சமாதானம், நல்லிணக்கம், சமூக ஒற்றுமைக்கான பாதை உருவாகும். இந்த நிலையில் உட்கட்டுமான புனரமைப்பின் மூலம் சிறந்ததொரு மீள்கட்டுமானத்தை மேற்கொள்ள முடியும். இதனைவிட மனித கண்ணியத்தை ஊக்குவித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அனைத்து சமூக உறுப்பினர்களையும் உள்ளுணுர்ந்துகொள்ளல் என்பன மிகவும் முக்கியமானவை.
இலங்கையின் அரசியல், மத மற்றும் கலாசார தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் செயற்பாடுகளும் காயங்களை ஆற்றுவதற்கும் பொருளாதார மற்றும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் உறுதுணையாகும் வகையில் அமைய வேண்டும். ஜனாதிபதி மற்றும் நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் திருத்தந்தை தமது உரையில் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: