15 Dec 2014

இந்தியாவில் ரஷ்ய உதவியுடன் மேலும் 10 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து,வணிகம்

SHARE
இந்தியாவில் எதிர்வரும் காலங்களில் ரஷ்ய உதவியுடன் மேலும் 10 க்கு மேற்பட்ட அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடியால் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள் அமைக்கப்படவுள்ளன என்பதற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது கைச்சாத்தானது.

மொத்தமாக இருவரது சந்திப்பின் போதும் பெட்ரோல், எரிவாயு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே மொத்தம் 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வந்துள்ளார். நேற்று (11) அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதன்பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கும் போது, இந்தியாவை தாங்கும் தூண்களில் ஒன்றாக ரஷ்யா விளங்குகிறது. கடந்தகால வரலாற்றை திரும்பி பார்த்தால் இக்கட்டான நேரங்களில் இந்தியாவுக்கு பக்கபலமாக நின்று ரஷ்யா உதவி செய்துள்ளது. அன்று முதல் இன்றுவரை இந்தியாவுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும். ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரமான அரசை ஏற்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் எடுக்கப்படும். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி நிலவ இரு நாடுகளும் கைகோத்து செயல்படும்.

ரஷ்ய உதவியுடன் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் மேலும் 12 அணுஉலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அணுஉலைகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். அணுஉலைக்கு தேவையான பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். பாதுகாப்புத் துறையிலும் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது.  இருநாட்டு கூட்டு முயற்சியில் ஏற்கெனவே பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போர் விமானம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் போது கருத்து தெரிவித்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கருத்து தெரிவிக்கையில், அரசியல், வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. வர்த்தகத்தைப் பொறுத்தவரை நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை. எனவே இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக உறவை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று அவர் கூறினார்(nl)
SHARE

Author: verified_user

0 Comments: