29 Nov 2014

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளைபிரதி அமைச்சர் வி.முரளிதரன்பார்வை

SHARE
ஜனாதிபதியால் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள 165 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை வெள்ளிக்கிழமை (28) பார்வையிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெள்ளிக்கிழமை (28) வெபர் விளையாட்டு மைதான வேலைகளைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சினி ஜெயகெதர, மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,  மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என் மதிவண்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் வெபர் விளையாட்டு மைதானத்துக்கு வருகை தந்து நடபெற்று வரும் வேலைகளைப் பார்வையிட்டனர்.

மைதானத்தின் நிர்மாண வேலைகள் குறித்து பொறியியலாளர்களான எம்.மங்களேஸ்வரன், ஆர்.ரகுராமன், ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.

அத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ்விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.

வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.

வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை 2012ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்திருந்தார்.

யேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்த அங்கிலிக்கன் மிஷன் கோயில் மற்றும் வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலமாகக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில் சேமக்காலையாக இருந்த இடத்தினை  1960களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன், கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தை உருவாக்கினார் என்பது வரலாறாகும்.

இவருடைய பெயரிலேயே  மட்டக்களப்பு நகரின் பிரபல விளையாட்டு மைதானமான வெபர் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெபர் விளையாட்டு மைதானத்தை மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் கல்லூரி என அனைத்து பாடசாலைகளும் விளையாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் இந்த மைதானம் நவீன மயப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: