25 Feb 2022

கிழக்கு மாகாணத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ற்சியை ஒரு தனித்துவமானதாகக் கொண்டு செல்ல வேண்டும் - ஆணையாளர்.

SHARE

கிழக்கு மாகாணத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ற்சியை ஒரு தனித்துவமானதாகக் கொண்டு செல்ல வேண்டும் ஆணையாளர்.

கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்களுக்கான அங்கீகாரம் சற்றுக் குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணம் நிருவாகங்களுக்கிடையில் காணப்பட்ட முரண்பட்ட கருத்துக்களும், மோசடியான சம்பவங்களும், தவறான செயற்பாடுகளுமே, மக்கள் மத்தியில் ஒரு விமர்சனத்திற்குரிய காரணங்களாக இருந்தன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சங்கம் ஒன்றிற்கு தலைவராக ஒரு வைத்தியர் ஒருவர் செயற்படுவது பாராட்டுதலுக்குரியதாகும். என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமாகிய எம்.அஸ்மி ஆதம்லெப்பை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை வேலைத்திட்டத்திற்கமைவாக கூட்டுறவு அதன் தனித்துவமான பயணத்தை நோக்கி எனும் கருப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு எனும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய கோப்பிறஸ் பல்பொருள் விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மாகாணத்திலுள்ள வினைத்திறன் மிக்க தெரிவு செய்யப்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் மன்முனை தென் எருவில் களுவாஞ்சிகுடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் வியாழக்கிழமை(24) மாலை இடம்பெற்ற கோப் பிறஸ்  திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோப் பிறஸை திறந்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இயக்குநர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

கிழக்கு மாகாணத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ற்சியை ஒரு தனித்துவமானதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், திணைக்களம் பல்வேறு விதமான செயற்பாடுகளை அமுல்ப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். அந்த வகையில் அந்த அந்த சங்கங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்ககளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதுபோல் இச்சங்கத்திற்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம். கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சி என்பது ஒரு தனிமனிதனால் மாத்திரம் முடியாது. திணைக்களமும், இயக்குனர் சபையும், ஊழியர்களும், ஒருமித்து செயற்படல் வேண்டும்.

கூட்டுறவுச்சங்கங்கள் வெறுமனே சீனியையும். பருப்பையும் விற்றுக் கொண்டிருக்காமல்அதனுடைய சேவைகளை கல்வி, சுகாதாரம், மற்றும் உல்லாசத்துறை, உள்ளிட்ட பல்துறை சார்ந்ததாக விஸ்த்தரிக்க வேண்டும். கடந்த காலங்களில் நிதியைத் தவறான முறையில் பயன்படுத்திய கூட்டுறவுச் சங்கங்களில் தலைவர்களின் பல பின்னடைவான தீர்மானங்களினால்தான் கூட்டுறவுச் சங்கங்கள் தேல்வியைக் கண்டன.

நாங்கள் மத்திய அரசிடமிருந்து பெறுகின்ற நிதியை வைத்துக் கொண்டு இவ்வாறான சங்கங்களைப் பலப்படுத்துகின்ற செயற்பாட்டில். ஈடுபட்டு வருகின்றோம். அதற்கு ஊழல் மேசடியற்ற செயற்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்கு சங்கங்களின் இயக்குர் சபைகள் உறுதுணை வழங்க வேண்டும். குறிப்பாக ஏனைய திணைக்களங்களிலே கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் கழையப்படல் வேண்டும். அதற்காக பணிப்பாளர் சபையும், ஊழியர்களும், ஏனைய திணைக்களத்தினரோடு சேர்ந்து செயற்பட வேண்டும். தற்போது கூட்டுறவு சங்கங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டதாக செயற்பட்டு வருகின்றன. அதற்காக வேண்டி கிழக்கு மாகாணம் கூடிய அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


























SHARE

Author: verified_user

0 Comments: