6 Mar 2021

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – சந்திரகாந்தன் எம்.பி தெரிவிப்பு.

SHARE

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு சந்திரகாந்தன் எம்.பி தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்கள். இதுதான் தேவை எங்கள் மாவட்டத்திற்கு. அபிவிருத்தி சார்ந்த விடயத்துக்கு நானும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்  அவர்களும், செயற்படுகின்றோம். அதேபோன்று மக்களின் உரிமையை தட்டிக்கேட்க இருவரையும் மட்டக்களப்பு மக்கள் நிதானமாக தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை(5) மாலை   உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் எருவில் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்....

எமது நாட்டிலே திறந்த பொருளாதாரக் கொள்கை மூடிய பொருளாதாரக் கொள்கை காணப்பட்டாலும் கடுமையான மூடிய பொருளாதாரக் கொள்கை காரணமாக ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க தோற்றுப்போன வரலாறும் உண்டு. இதனை எமது பாட்டன் பாட்டி சொன்னதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். தற்போது அரசியல் மாறிப்போய் கொள்கையும் மாறிப்போன சம்பவங்களையும் காணலாம்.

உலகத்திலே கொவிட்-19 காரணமாக உலகப் பொருளாதார வீழ்ச்சியானது மிகவும் மோசமாக இடம்பிடித்துள்ளது. நம்நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி, வருமான வீழ்ச்சி தனிநபர் வரைக்கும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து வீழ்ந்திருக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது.

நாங்கள் தமிழ் மக்களுக்காக போராடினோம் அப்போது மின்மாற்றிகள் உடைக்கப்பட்டன. எங்களின் வீடுகளுக்கு பக்கத்தில் மின்சார வசதியில்லை. அதனால் எங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை. அதனால் வைத்தியர்கள் எங்கள் சமூகத்தில் குறைவாகத்தான் காணப்பட்டன. அதன் பின்னர் 2008 ஆண்டுக்கு பின்னர் அரசியல் என்றால் என்ன? அதிகாரம் என்றால் என்ன? முதலமைச்சர் என்றால் என்ன? அரசியலால் எங்கள் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? அரசியலால் எம்மக்களை எவ்வாறு வாழ வைக்க முடியும்? என்பதைப் பார்த்தோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்கள். இதுதான் தேவை எங்கள் மாவட்டத்திற்கு. அபிவிருத்தி சார்ந்த விடயத்துக்கு நானும் மற்றும் வியாழேந்திரன்  அவர்களும், செயற்படுகின்றோம். அதேபோன்று மக்களின் உரிமையை தட்டிக்கேட்க இருவரையும் மட்டக்களப்பு மக்கள் நிதானமாக தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

வழமையாக சொல்லப்போனால்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளிநாடுகளில் வாழ்கின்ற எம்மவர்கள் இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களிடம் பாலையும் தேனையையும் ஓட வைக்கின்றார்கள் என நினைக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழுகின்ற நீங்க  எம்மக்களுக்கு ஒன்றையையும் ஓட வைக்க தேவையில்லை நீங்கள் அங்கிருக்கும் உங்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைத்து இங்கே வாழுகின்ற மக்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி அவர்களின் பொருளாதாரத்தை தூக்கி விடுவதற்கு வழிகாட்டுங்கள்.

அங்கிருந்து  இங்கு நம்மவர்கள் உற்பத்தி செய்யும் 5000 சாரிகளை வாங்கினாலே போதும். பாலும் தேனும் இல்லாத குடும்பங்களில் பாலும் தேனும் சிறப்பாக ஓடும். குடும்பங்கள் சீராக வாழும். பிள்ளைகள் விரும்பி படிப்பார்கள். இங்கே வைத்தியர்கள் உருவாகுவார்கள். இல்லாவிட்டால் நம்முடைய தமிழ் அரசியல் தலைமைகள், மக்கள் ஏசுவார்கள் படித்து பல வைத்தியர்கள் எமது மாவட்டத்தில் உருவாக்கினால் போதும். தமிழர்கள் சார்பில் பல வைத்தியர்கள் உருவாக்கினால் சிங்கள வைத்தியர்கள் நம்முடைய தமிழர் பிரதேசத்தில் ஏதற்கு? நம்முடையவர்கள் வைத்தியர்களாக பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற போது அல்லது பயிற்ச்சியில் இருக்கும் போது அவர்களுக்கு வெளிநாடுகளில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து வெளிநாடுகளில் குடியேறுவார்கள். இங்கே வைத்தியம் செய்வதற்கு வைத்தியர்கள் இல்லை. இப்படி பல பிரச்சனைகள் தமிழர் பிரதேசங்களில் காணப்படுகின்றன.

இதனை மாற்றியமைக்கும் பொறுப்பை தமிழ் மக்கள் சுமத்தி இருக்கின்றார்கள். இததனை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு உறுதியான சமூகமாக கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உறுதியான அரசியல், பொருளாதாரத்தோடு, கலை கலாச்சாரத்துடன் வாழவைக்கும் பொறுப்பு மிக்க சமூகமாக வாழ்வதற்குரிய பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: