கொரோனா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட ஒதுக்குப் பறக் கிராம மக்களுக்கு தமது நிறுவனத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
இவ்வாறான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை 02.12.2020 வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் தோணிதாட்டமடு கிராமத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தோணிதாட்டமடு கிராம வாசிகளான ஒட்டு மொத்த 33 குடும்பங்களுக்கும் பிஸ்கட் துவாய் போர்வை சவர்க்காரம் பற்பசை பாதணி உள்ளிட்ட இன்னும் பல உதவிப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஒதுக்குப் புறக் கிராம மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கண்டறிந்து வாழ்வாதார முயற்சிகளுக்கு உதவி வழங்க நாம் தயாராக உள்ளோம். அதற்கு கிராம மக்கள் தங்களுக்கிடையில் ஒற்றுமைப்பட்டு ஒத்துழைப்பு வழங்கி கூட்டாக இயங்க வேண்டும். உள்ளுர் வளங்களைக் கொண்டும் கிடைக்கும் உதவிகளைக் கொண்டும் அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யாமல் எப்படி மேலும் மேலும் முன்னேற்றமடையலாம் என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள் வலுப்பெற வேண்டும்” என்றார்.
நிகழ்வில் பிரிவுக் கிராம அலுவலர் சித்திரவேல் விஜயராஜன் அருவி பெண்கள் வலையமைப்பின் திட்ட உதவி இணைப்பாளர் எஸ். தர்ஷினி வெளிக்கள உத்தியோகத்தர்களான என். லுனிற்றா, என். தாட்சாயினி, யூ. கவிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment