22 Aug 2020

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

SHARE


(UU) 

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயமானது 1916ம் ஆண்டு அருட்பணி செபஸ்தியான் லாசராஸ் அடிகளாரினால் சிறு ஓலைக் குடிலாக கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயமானது 1923ம் ஆண்டிலிருந்து புளியடிகுடா பங்கில் வாழ்ந்துவந்த இயேசுசபைத் துறவியான அருட்பணி ஹெப்பெனோ அடிகளாரினால் பராமரிக்கப்பட்டுவந்தது. அக்காலப் பகுதியில் குறைந்தளவான கத்தோலிக்க குடும்பங்களே அங்கு வசித்து வந்தனர்.

அருட்தந்தை ஹெப்பெனோ அடிகளாரை தொடர்ந்து அருட்தந்தை பீலிக்ஸ் கிலாக்சன் அடிகளாரின் பராமரிப்பில் இவ்வாலயம் காணப்பட்டது. அருட்தந்தை பீலிக்ஸ் கிலாக்சன் அடிகளார் ஓலைக் குடிசையாக இருந்த இன்னாசியார் ஆலயத்தினை 1952ம் ஆண்டு கல்லினால் கட்டி கூரை போட்டு மெருகூட்டினார். இவ்வேளையில் 25.10.1952ல் மதிப்பிற்குரிய ஆயர் இக்னேசியஸ் கிளேனி அவர்கள் மறை மாவட்டத்தின் பங்குகளின் எல்லைகளை தீர்மானித்துப் புதிய பங்குகள் உருவாக்கப்பட்ட வேளையில் இஞ்ஞாசியார் ஆலயமானது புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் 1960களில் இப்பகுதியினை நோக்கி மக்கள் குடியேறத் தொடங்கினர். கத்தோலிக்க மக்களும் பறந்கி இனத்தவரும் கனிசமான அளவு சென்று குடியேறினர். இவ்வாறு அதிகரித்த தொகையினராக கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வந்த வேளையில் 1978ம் ஆன்னு நவம்பர் மாதம் அடித்த சூராவளியினாலும் வெள்ளப் பெருக்கினாலும் இப்பகுதி வாழ் மக்களும் அவர்களுடைய வதிவிடங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இஞ்ஞாசியார் ஆலயமும் தரைமட்டமாகியது. அக்காலப் பகுதியில் பங்குத்தந்தையாக விளங்கிய அருட்பணி எப்.எக்ஸ்.மேயர் அடிகளார் புதியதோர் ஆலயத்தை அமைத்தார். அதன்பின்னரான காலப்பகுதியில்  இப்பகுதியில் கத்தோலிக்க மக்களின் தொகை கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இவ்வாலயத்தில் திருப்பலி வேளைகளில் அனைத்து மக்களையும் உள்ளடக்க போதாமல் இருந்தது.

இதனால் 1992ம் ஆண்டளவில் அக்காலப்பகுதியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி யோசப்மேரி அடிகளாரின் முயற்சியினால் புதிய ஆலயம் அமைக்கும் பணிகள் 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அப்போதைய ஆயர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாலய நிர்மாணப் பணிகளில் அப்போது துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜோயல் அடிகளாரின் பங்கு கணிசமானது ஆகும்.

பின்னர் 2000.01.17ம் திகதி ஆயர் அவர்களினால் கல்லடி – டச்பார் ஒரு தனிப் பங்காகவும் இயேசு சபையினரின் பராமரிப்பிற்கு உட்பட்டதாகவும் பிரகடணம் செய்யப்பட்டது. அதன் பின்னர் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி யோசப்மேரி அடிகளார் நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ரீ.ஜீவராஜ் அடிகளார் 06.08.2012ம் ஆண்டு முதல் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார். இவரினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த ஆலய நூற்றாண்டு அபிவிருத்திப் பணிகளை முழு மூச்சுடன் செயற்படுத்தி சில திட்டங்களை பூர்த்தி செய்தார். அவரைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு ஆவணி மாதமளவில் புதிய பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரும் நூற்றாண்டினை முன்னோக்கியதாக பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக்கொண்டு வந்தார்.

இவரைத் தொடர்ந்து 2016 ஜனவரியில் புதிதாக பணிபுரிய வருகைதந்த அருட்பணி சுவக்கின் றொசான் அட்களார் பங்குச் சபையினருடனும் பங்கு மக்களுடனும் இணைந்து 2016 ஆம் ஆண்டு ஆலய நூற்றாண்டினை வெகு விமரிசையாக ஆன்மீக ரீதியாக கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாலயத்தின் 104 ஆவது வருடாந்த திருவிழாவானது கடந்த (21) திகதி வெள்ளிக்கிழமை  மாலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி சுவக்கின் றொசான் அட்களார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன், 

முதல் நாள் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை ஒப்புக்கொடுத்ததுடன், 38 சிறுவர்களுக்கு ஆயரினால் முதல் நன்மை உறுதிப் பூசுதல் எனும் அருட்சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து எட்டு நாட்கள் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29.08.2020 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 5.30 மணிக்கு நற்கருனை ஆராதனையும் ஆசீரும் இடம் பெறவுள்ளது.  கொவிட் 19 சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடை பெறும் இத்திருவிழாவில் புனிதரின் திருவுருவப்பவனி இம்முறை இடம்பெறாது. 

அதனைத் தொடர்ந்து மறுநாள் 2020.08.30 ஆந் திகதி காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் பெருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 104 ஆவது ஆண்டு திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெறவுள்ளது.

அத்தோடு அனைத்து இறை பக்தர்களையும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியாரின் வருடாந்த திருவிழாவிற்கு அன்புடன் அழைத்து நிற்கின்றனர் ஆலய பங்குதந்தையுடன் இணைந்து பங்கு மேற்புப்பணிச்சபையினரும் பங்கு மக்களும்.

SHARE

Author: verified_user

0 Comments: