1 Jul 2020

நாட்டு அபிவிருத்தியில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

SHARE
நாட்டு அபிவிருத்தியில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை  (2020.07.01) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 -  2010ஆம் ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டதனை நினைவு கூர்ந்த பிரதமர், அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் தங்கள் அரசாங்கம் செயற்பட்டதாக கூறியுள்ளார்.

தங்கள் அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, முந்தைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை. வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்ட்டதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினையான குடிநீர் சிக்கலுக்கு தீர்வு வழங்குவதற்காக தங்கள் அரசாங்கம் முதலிடம் வழங்குவதாக தெரிவித்த பிரதமர் தற்போது வரையிலும் அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என பிரதமர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: