19 Jul 2020

30 வருட நாடாளுமன்ற பதவிக் காலத்தில் தங்களது பரம்பரைக்கே சொத்து சேகரித்து விட்டு மீண்டும் ஒழுகிக் கரையும் குடிசைகளில் வாழும் மக்களிடம் வருகிறார்கள். கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்

SHARE
(ஏ.எச்.ஏ)

30 வருட நாடாளுமன்ற பதவிக் காலத்தில் தங்களது பரம்பரைக்கே சொத்து சேகரித்து விட்டு மீண்டும் ஒழுகிக் கரையும் குடிசைகளில் வாழும் மக்களிடம் வருகிறார்கள். கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்
30 வருட நாடாளுமன்ற பதவிக் காலத்தில் தங்களது பரம்பரைக்கே சொத்து சேகரித்து வைத்து விட்டு இப்பொழுது மீண்டும் ஒழுகிக் கரையும் குடிசைகளில் வாழும் ஏழை மக்களிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள்  இப்படிப்பட்டவர்களை இம்முறை நாடாளுமன்றப் படியேற அனுமதிக்காதீர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீ.ல.மு.கா. வின் மட்டக்களப்பு வேட்பாளருமான நஸீர் அஹமட்  வேண்டுகோள் விடுத்தார்

ஞாயிற்றுக்கிழமை 19.07.2020 ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தேர்தல் கொள்கை விளக்க பரப்புரையின் போது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட்;,

காலத்துக்குக் காலம் வரும். தேர்தல்களையொட்டி அரசியல்வாதிகள் அவர்கள் காலாகாலம் ஏமாற்றிய மக்களின்  காலடிக்கு வருகிறார்கள்.

வந்து நம்பிக்கைகளைக் கொடுத்து மீண்டும் மக்களை ஏமாற்றுவதும் எதிர்க்கட்சியை குற்றம் சுமத்துவதும் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என முடியாதவற்றையும் முடியுமாக்கிக்காட்டுவதும்  வாடிக்கையாகி விட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பழையபடி அடுத்த தேர்தலில் புதுக்கதைகளை கொண்டுவருவதும் பேரப்பிள்ளைகள் கூட சுகபோகமாக வாழுமளவுக்குச் சொத்துக்களை வாங்கியும் வேலைவாய்ப்புக்களை விற்றும் கொந்தராத்துக்காரர்களிடம் கொமிஷன் பெற்றும் இளைஞர் யுவதிகளை பரிதவிக்கவிடுவதுமான அரசியல் பரம்பரையைத்தான் இதுவரை கண்டு வந்திருக்கின்றோம்.

ஆனால் எனது அரசியல் பிரவேசம் இத்தகைய அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

நான் அரசியலுக்குள் வந்தபின் எனது பரம்பரைக்கான சொத்துக்களைச் சேகரிக்கவில்லை.

ஏற்கெனவே சுயமாகச் தொழில் செய்து சொத்துக்களைச் சேர்த்து அதில் ஏழை எளியவர்களுக்கும் வழங்கி விட்டு எனது பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கவேண்டும், அல்லல்படும் மக்களின் இன்னல்களைப் போக்க வேண்டும், இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிக் காக்க வேண்டும், அபிவிருத்திப் பாதையில் பின் தங்கிய கிராமங்களை நகர்த்தவேண்டும் என்னும் நன்னோக்கில் உங்கள் முன் வந்தேன் வாக்குறுதிகளைத் தந்தேன் ; நிறைவேற்றி நின்றேன்.

கிழக்க மாகாண சபையில் இரண்டரை வருடகாலம் விவசாய அமைச்சராகவும், மேலும் இரண்டரை வருட காலம் முதலமைச்சராகவும் இருந்து இன மத சாதி ஊர் பிரதேசவாதம் பார்க்காது மக்களை மானுட நேயத்தின் அடிப்படையில் சமமாக மதித்து, அனைவருக்கும் என்னாலான அனைத்துச் சேவைகளையும் அள்ளி வழங்கினேன்.

நான் காணிகளை அபகரிக்கவில்லை, களவாடவில்லை, கொந்தராத்துச் செய்யவில்லை, கொமிசன் வாங்கவில்லை,

எனது சொந்தப்பணத்தை செலவு செய்தே பல்வேறு அபிவிருத்திகளையும் வாழ்வாதாரங்களையும் பரோபகார சேவைகளையும் மேற்கொண்டேன்.

1500இற்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களை வழங்கினேன்.

பாடசாலைகள் வைத்தியசாலைகள் ஏனைய துறைகளுக்கான நவீன வசதிகள்,  கட்டிடங்கள் அரச தனியார் வேலைவாய்ப்புக்கான தொழிற்பேட்டைகள் சுயதொழில் ஊக்குவிப்புக்கள் ஏழைகள் விதவைகள் வலது குறைந்தோருக்கு தொழில் முயற்சிகளுக்கான வாழ்வாதார உதவிகள் என என்னால் முடிந்த அனைத்தையும் செய்து முடித்துள்ளேன் என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் அனைவருக்குமான உதவிகளை வீடு தேடிவந்தும் பொது நிறுவனங்கள் ஊடாகவும் வழங்கினேன்.

இவைகள் யாவும் குறைந்தளவு அதிகாரமும் குறைந்தளவு நிதி ஒதுக்கீடும் உள்ள மாகாண சபையின் ஊடாக என்னால் செய்யப்பட்டவை. நான் அதி உச்ச அதிகாரமும் ஒதுக்கீடும் உள்ள நாடாளுமன்றப் பிரதிநிதியாகச் செல்கின்றபோது எனது சேவைகள் மேலும் இரட்டிப்பாகும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை.

செய்த சேவைகளைவிடவும் செய்ய வேண்டிய மக்களின் தேவைகள் அதிகளவில் உள்ளன.

அவற்றை இனங்கண்டு திட்டமிட்டு செயற்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: