1 May 2020

சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதித்தால் இன்னும் 2 குடும்பங்களுக்கு நாங்கள் உதவ தயார்.

SHARE
சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதித்தால் இன்னும் 2 குடும்பங்களுக்கு நாங்கள் உதவ தயார்.
சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தொகுதி சிகையலங்கார சங்கத்தின் தலைவர் தம்பையா இராசலிங்கம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடி வொயிஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தின் உத்தரவின்படி சிகையலங்கார நிலையங்களை கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மூடியுள்ளோம். இதனால் தாம் வருமானம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோமென தெரிவித்தார்.

அத்தோடு இதன் காரணமாக எமது அன்றாட வருமானம் தடைபட்டு விட்ட நிலையில் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாட்களில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நாங்கள் சிகையலங்கார நிலையங்களை திறந்து எமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 

ஆயினும் தற்போது அரசாங்கம் மறுஅறிவித்தல்வரை சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்திய பின் எமக்கான வருமானம் எதுவும் இன்றி நாம் பெரிதும் பாதிக்கப்பட்டு நிற்கதியாகிய நிலையில் உள்ளோம்.

மேலும் நாங்கள் இவ்வாறு எமது தொழில் நிலையங்களை மூடி வைத்துள்ள நிலையில் வேறு சில சிகையலங்காரம் செய்யும் நபர்கள் தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்குள் சென்று சிகையலங்கார தொழிலை மேற்கொள்கின்றமையானது மதுபான கடைகளை மூடி வடிசாராயத்தை மேலோங்க செய்திருக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

அவர்கள் சுகாதாரமற்ற முறையில் இதை செய்வது கிராமங்கள் தோறும் பாரிய அச்சுறுத்தல் நிலையினையே ஏற்படுத்தியுள்ளது. 

அதனால் நாங்கள் சுகாதார முறைகளை பின்பற்றி எமது சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்றும், வருமானத்திற்கான வழியை எமக்கு செய்து தரவேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதோடு, தமது கடைகளை திறக்க விட்டால் அரசிடம் தாம் கையேந்தாமல் தாமும் வாழ்ந்து இன்னும் இரண்டு குடும்பங்களுக்கு எம்மால் ஆன உதவிகளையும் மேற்கொள்வோம் என இதன்போது தெரிவித்திருந்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: