15 Dec 2019

தவறாக சிகிச்சையளிக்கப்பட்ட சிறுமி மரணம் வைத்தியர், தாதி மருந்தகர்களுக்கு பிணை

SHARE
தவறாக சிகிச்சையளிக்கப்பட்ட சிறுமி மரணம் வைத்தியர், தாதி மருந்தகர்களுக்கு பிணை.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமிக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்தாதியர். மருந்தாளர் அத்துடன் நீதிமன்றில் முன்னிலையான வைத்தியர் உட்பட மூவரையும் தலா ஒருவருக்கு 5 இலட்சமும் இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு அதிக மருந்தை வழங்கியதால் கடந்த திங்கட்கிழமை அச்சிறுமி உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து அந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். றிஸ்வான்  உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேக நபர்களான 2ம் ,3ம் எதிரிகளான பெண் தாதியர், மருந்தாளர், ஆகிய இருவரையும் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் சந்தேக நபரான வைத்தியர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானார்.

இதனையடுத்து இந்த வழக்கை நீதவான் சிலமணிநேரம் ஒத்திவைத்தார்.

பின்னர் பிற்பகல் மீண்டும் வழக்கை எடுக்கப்பட்டபோது இவர்களை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான விஜயகுமார், மரியசுலோசன் ஆகியோர் நீதிமன்றில் கேட்டுக் கொண்ட நிலையில் நீதிவான் இந்த வைத்தியசாலையில் 9 வயது சிறுவன் இரத்தம் மாற்றி ஏற்றி உயிரிழந்த சம்பவம். சிசு உயிரிழந்த சம்பவம் இவ்வாறான சம்பவங்கள்; தொடர்ச்சியாக அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அந்தக் கால பகுதியில் இன்னும் ஒரு சிசு உயிரிந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும். ஊடகங்கள் முந்திக் கொண்டதால் இவ்வாறான சம்பவங்கள் வெளிவந்துள்ளது என நீதவான் சுட்டிக்காட்டி மீண்டும் வழக்கை ஒத்திவைத்தார்

மீண்டும் மாலை 5.30 மணிக்கு வழக்கு எடுக்கப்பட்டு இவ்வாறான சம்பவம் இனி வைத்தியசாலையில் இடம்பெறக் கூடாது என சுட்டிக்காட்டி பல எச்சரிக்கையின் மத்தியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சந்தேக நபர்கள் இழப்பீடு வழங்குவதாக ஏற்றுக் கொண்டதையடுத்து சந்தேக நபர்கள் 3 பேரையும் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்துள்ளார். 


SHARE

Author: verified_user

0 Comments: