71 ஆண்டுகால ஏமாற்று தோல்வியுற்ற அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம் தேசிய மக்கள் சக்தி இயக்கம் மட்டக்களப்பில் அறைகூவல்.
71 ஆண்டுகால ஏமாற்று தோல்வியடைந்த திறமையற்ற அரசியல் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு தாம் நாட்டு மக்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுப்பதாக மக்கள் சக்தி இயக்கம் (National People’s Power) இயக்கம் மட்டக்களப்பில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை 14.10.2019 மட்டக்களப்பு மாவட்டத்தின் பல நகர, புறநகரப் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நல்லதோர் தேசத்தையும் மக்களையும் கட்டி எழுப்ப வேண்டும், அதற்கு உண்மையான, முற்போக்கான, மனிதாபிமான, ஜனநாயக இடதுசாரி சக்திகளுடன் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டும்.
ஒற்றுமை சகோதரத்துவம் என்பனவற்றுடன் இணைந்து உலகளாவிய வல்லரசுகளின் பொறியில் விழாது இந்நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளை தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் கொண்டு வரப்படுகின்ற அனைத்து அடக்குமறைச் சட்டங்களையும் நிராகரிக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் சட்டம் சுயாதீனமாக்கப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். அதன் மூலம் அனைவருக்குமான நீதி நியாயத்தை உறுதிப்படுத்த முடியும்.
மக்களின் சுதந்திரத்தையும் அனைத்து விதமான மனித உரிமைகளையும் பாதுகாப்பதோடு அனைத்துக் குடிமக்களையும் சரிசமமாக மதித்து எல்லா வகையான தீவிரவாத செயற்பாடுகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேவேளை எந்தவொரு சமூகத்தையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை தடுத்து ஒரு புதிய ஜனநாயக முற்போக்கு மக்கள் நல ஆட்சியை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும்” என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment