பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அபயமளிப்பதற்காக காத்தான்குடியில் பெண்கள் காப்பகம் அமைக்கும் ஆலோசனைக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆதரவு
பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அபயமளிப்பதற்காக பெண்கள் காப்பகம் ஒன்றை அமைக்கும் காத்தான்குடி மகளிர் நல ஆர்வலர்களின் ஆலோசனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் மகளிர் நல ஆர்வலருமான ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
இவ்வாறான மகளிர் காப்பகம் ஒன்றின் தேவை மிக நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த ஒன்று என்றும் அவர் கூறினார்.
இது விடயமாக செவ்வாய்க்கிழமை 09.04.2019 விவரம் தெரிவித்த ஸல்மா ஹம்ஸா,
முதலில் கிழக்கு மாகாணத்தில் மகளிர் காப்பகம் ஒன்றின் தேவை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி பல்துறைசார்ந்த மகளிர் நலனோம்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார்ந்தவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றபோது காத்தான்குடியில் மகளிர் காப்பகம் ஒன்று நிறுவப்படுவதற்கான ஆதரவும் உறுதி மொழியும் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக ஸல்மா ஹம்ஸா மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வகையிலான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் பல்வேறு தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பெண்களின் நலன்காக்கும் வகையில் விடுத்த அனைத்து வேண்டுகோள்களும் ஆளுநரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மிக விரைவில் இவற்றுக்கான வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணத்தை நாடி நீதிமன்றம் செல்லும் பெண்களுக்கு அபயமளிப்பதற்காகவும் நீதிமன்றத்தினால் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் பெண்களையும் சிறுவர்களையும் பராமரிப்பதற்கு வசதியாக இந்த நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
குறிப்பாக நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாத்துப் பராமரிக்க இதுவரை ஒரு காப்பகம் இல்லாதிருப்பது உணரப்பட்டுள்ளதனால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும் ஸல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment