காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக மங்களகம பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – மங்களகம திவுலானை காட்டுப் பகுதியில் திங்கட்கிழமை மாலை 17.12.2018 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் நாவிதன்வெளி 15ஆம் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மேகராஜா (வயது 42) என்பவரே பலியாகியள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மேய்ச்சலுக்காகச் சென்ற தனது மாடுகளைத் தேடிக் கொண்டு காட்டுப் பகுதிக்கூடாகச் சென்ற போது அவ்வழியே காட்டுக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென மூர்க்கமடைந்து இவரைத் தாக்கியுள்ளது.
சம்பவத்தில் ஸ்தலத்திலேயே அவர் பலியாகியுள்ளார்.
மாடுகளைத் தேடிச் சென்றவர் வீடு திரும்பாதததை அறிந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது சடலம் காட்டு யானை தாக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான இந்தக் குடும்பஸ்தர் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து விட்டு சமீபத்தில்தான் நாடு திரும்பியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மங்களகம பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment