பட்டிருப்புத் தொகுதியின் அபிவிருத்தி தொடர்பாகவும், வரஇருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் தமது கட்சி உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பெறப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் இ.தவஞானசூரியம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அங்கத்தவர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டம் வியாழக்கிழமை (22) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது பட்டிருப்புத் தொகுதி சார்பாக இரண்டு வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளோம், அதில் ஒருவராக எமது கட்சியின் இத் தொகுதியின் அமைப்பாளராகிய இ.தவஞானசூரியம் என்னை எமது குழு தெரிவு செய்துள்ளதுடன், இன்னுமொரு தகுந்த வேட்பாளரையும் தேர்வு செய்து தருவதாக இக்குழு இன்று தெரிவித்து. அதற்கிணங்க அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்.
குருமண்வெளி – மண்டூர் ஓடத்துறைக்கு பாலம் அமைத்தல், குருமண்வெளியிலிருந்து, பட்டிருப்பு வரையிலுள்ள 7 குளங்களுக்கும் நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு ஏற்று நீர்ப்பாசனம் செய்வது, அதுபோல் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள பொறுகாமம், கோவில்போரதீவு, பெரியபோரதீவு குளங்களுக்கு ஏற்று நீர்பாசனம் செய்தல், பட்டிப்பளைப் பிரதேசத்திலுள்ள கடுக்காமுனைக் குளத்திலும் ஏற்று நீர்ப்பாசனம் செய்தல், குளங்களை ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்தல், வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் நெற்களஞ்சியசாலை அமைத்தல். களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சாலைக்கு 5 பேரூந்துகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களை எனது மயற்சியினால் தற்போது மேற்கொண்டு வருகின்றேன்.
தற்போதைய நிலையில் எமது நாடு எதிர்காலத்தில் சிறப்பாக வரக்கூடிய வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கின்றது. எமக்கு தற்போது கிடைத்திருக்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் கடந்த காலத்தில் 12 ஆண்டுகள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்தவர், அதற்கு முன்னர் பிரதமராக இருந்த மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவதாக காணப்படுகின்றார்.
தற்போதைய பிரதம மந்திரியை உலகத்தினரால் நன்கு அறியப்பட்டவர், இலங்கையில் பெரும்பாலான மக்களால் வரவேற்கப்படுகின்றவர், இதற்கு கடந்த பிரதேச சபைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும், அவர் எமது பட்டிருப்புத் தொகுதிக்கு மிகுந்த சேவையாற்றுவார். அவரது சேவையும், நீண்ட ஆயுளும் வேண்டி நாம் பிரார்திக்கின்றோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களும், நாட்டை மிகவும் சுபீட்சமாக கொண்டு செல்வார்கள் என எமது பட்டிருப்புத் தொகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அபிவிருத்திக்குழுத் தலைவர் கே.விஜயகுமார அவர்களும் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment