உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட இளைஞரை, ஊர்மக்கள் சேர்ந்து மொட்டை போட்டு கரும்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டனை அளித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாகீல் என்ற இளைஞர். இவர் அப்பகுதி இளம்பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அதோடு, அவர்களின் புகைப்படங்களை தனது புகைப்படத்துடன் சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வாகீலுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி குத்தி ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக வாகீலின் குடும்பத்தினர், மாவட்ட கலெக்டர் சந்திரபூஷன் சிங்கிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஊர்மக்கள் வாகீலின் நடவடிக்கைகள் குறித்து போலீசிடம் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வாகீலை கைது செய்து, சிறையில் அடைத்த போலீசார், தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment