முன்னெடுக்கப்படும் திட்டங்கள் நிறைவேறுமாக இருந்தால் தமிழர்கள் இனிஒருபோதும் அரசியல் கைதிகளாக்கபடமாட்டார்கள். இக்காலகட்டத்தில் இவ் மைத்திரி, ரணில் அரசை தோற்கடிப்போமாக இருந்தால் இன்னும் பல அரசியற் கைதிகளை உருவாகுவார்கள் என பட்டிருப்பு தொகுதியின் தமிழரசு கட்சியின் பிரமுகர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பாக களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாகு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழ் தேசியத்தின் தந்தை என போற்றப்பட்டவர் தந்தை செல்வநாயகம் ஐயா. அவருடைய திறனுக்கும், அறிவுக்கும் ஏனைய தமிழ் தலைமைகளை போன்று பதவிக்கும் பணத்திற்கும் ஆளுங்கட்சிகளுடன் இணைந்து சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறில்லாமல் தமிழ் மக்களுக்காக பல வழிகளில் போராடி தன்னை தமிழுக்காகவே அர்ப்பணித்து மறைந்த பெரும் தலைவராவர். தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் தந்தையினுடைய வழியிலே சம்பந்தன் ஐயாவின் தலைமையில் அரசியற்பயணத்தை தொடர்கின்றனர். அவர்களின் கரத்தை பலப்படுத்தி தமிழினத்திற்கான அரசியல் உரிமையை பெற்றெடுப்பதே சிறந்தது. அதைவிடுத்து தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் போர்வையில் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கம் ஐயாவும் ஏனைய கட்சிகளை உதறிதள்ளி விட்டு தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமை வென்றெடுப்பதில் தன்னை இணைத்துக்கொண்ட தலைவர்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஷ்ரப் அவர்களை சகோதர முஸ்லிம் அரசியற் தலைவர்கள் அனைவரும் அவரை தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர். காரணம் முஸ்லிம் இனத்திற்கான அரசியல் உரிமையை தாங்களும் பெறலாம் என்பதை தூண்டிவிட்டவர். அதேபோன்று அனைத்து தமிழ் மக்களும், அனைத்து தமிழ் மக்கள் சார்ந்த அரசியல்வாதிகளும் தந்தை செல்வநாயகம் ஐயாவை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியற்கைதிகளின் விடுவிப்பு விடயத்தில் கூட்டமைப்பு நுட்பமான முறையில் கையாண்டு வருகின்றது. எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் 107அரசியற்கைதிகளின் விடுவிப்பில் மாத்திரம் இல்லாது இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் அரசியற் கைதிகளாக்கப்படக்கூடாத மாதிரியான தீர்வுகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு அரசியல் உரிமையை பெற வேண்டும். இவ்வளவு அரசியற் கைதிகளும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள்.
இக்காலகட்டத்தில் இவ் அரசாங்கத்தை தோற்கடிப்போமாக இருந்தால் மீண்டும் ராஜபக்ஷக்கள் சார்பான ஆட்சி அமையலாம். அரசியற்கைதிகளாக உள்ளவர்கள் எப்போதும் வெளிவரமுடியாத நிலையும், மேலும் பலர் அரசியற்கைதிகளாக பழிவாங்கப்படுவார்கள். மகிந்த தரப்பிலான ஆட்சி வந்தால் கூட அரசியல் பழிவாங்கல்கள் மூலம் எந்தவொரு இளைஞர்களும் கைது செய்யப்பட முடியாமை மாதிரியான ஒரு தீர்மானத்தை பெறுவதற்காக கூடிய சிரத்தையுடன் கூட்டமைப்பு செயற்படுகின்றது. கூட்டமைப்பை பற்றி விமர்சிப்பவர்கள் அனைவரும் மாற்றுவழியினை முன்வைத்து விமர்சிப்பவர்களாக தென்படவில்லை. அவ்வாறு மாற்றுவழியினை முன்வைத்து விமர்சித்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும்,
தமிழினத்திற்கு கிடைத்த பெரும்வாய்ப்பு எதிர்கட்சி தலைவர் பதவியாகும். தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் பேசுவதற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். வெளிநாட்டு பிரமுகர்கள், சர்வதேச மாநாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து பேசலாம் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment