21 Feb 2024

முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபையுடன் இணைந்து பங்களிக்க வேண்டும்” அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்.

SHARE

முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு  பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபையுடன் இணைந்து பங்களிக்க வேண்டும்”  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்.

விவாகரத்து உட்பட இன்ன பிற காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களதும் குழந்தைகளதும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் சமூக பொறுப்புக் கூறல் செயற்பாடுகளின் மீளாய்வு

 உளவளத்துணை உத்தியோகத்தர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அலுவலர்கள் அனைவரும் தங்களது கடமைப் பொறுப்புடன் நடந்து கொண்டு மக்களது குடும்ப வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளை புரிந்துணர்வுடன் தீர்த்து வைப்பதற்கு  பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபையுடன் இணைந்து பங்களிக்க வேண்டும்என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

குடும்ப நல்லிணக்க சபைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உத்தியோகத்தர்களுடன் மீளாய்வுக் கூட்டம் புதனன்று 21.02.2024 ஒலுவிலில் இடம்பெற்றபோது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம், ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும்  மேலதிக மாவட்டப் பதிவாளர்;, பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு, கலாச்சார உத்தியோகத்தர்கள், உளவளத் துணையாளர்கள், நிறுவன அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

அம்பாறை மாவட்டச் செயலகம் மற்றும் மனித எழுச்சி அமைப்பு(ர்நுழு) ஆகியவற்றின் ஏற்பாட்டில் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  கே. நிஹால் அஹமட் தலைமையில் இந்த மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன்,  “சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு விடயத்தை மனித எழுச்சி நிறுவனம் கையிலெடுத்துச் செயற்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடுகளின் சாதக விளைவுகள் முன்னுதாரணமாக, தேசிய மட்டத்தையும் அடைய வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் சமூக சிந்தனையோடு செயற்படுவோமாகில் சமூகத்தில் பல உறுதியான சாதக மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தற்காலத்தில், உலகமயமாதலின் விளைவால் நாம் எமக்கான தனித்துங்களையும் கட்டமைப்புக்களையும் கலாச்சார பாரம்பரியங்களையும் விழுமியங்களையும்  இழந்து நிற்கிறோம்.

இந்த இழப்பின் தாக்கம் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட மூல காரணங்களாய் அமைந்திருக்கின்றனஎங்களுக்கென்று எந்த விழுமியங்களுமே இருக்கக் கூடாது என்பதுதான் நவீன காலனித்துவமான உலக மயமாதலின் குறிக்கோளாகும்.

இந்த விடயத்திலே அரச உத்தியோகத்தர்களும் சமூகத்திலுள்ள அக்கறைக்குரிய அனைத்துத் தரப்பாரும் இணைந்து செயற்பட்டால் சமூகத்தில் பாதிப்புக்களைத் தவிர்த்து சுமுகமான குடும்ப வாழ்வை ஏற்படுத்த முடியும்என்றார்.

குடும்ப வாழ்வில் விவாகரத்து உட்பட இன்ன பிற காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க சமூக பொறுப்புக் கூறும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்டத்தில் 08 பிரதேசங்களில் குடும்ப நல்லிணக்க சபை (FRB)அமைக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிணக்குகள் காரணமாக நேரடியாக காழி  நீதிமன்றம் சென்று விவாகரத்தினைப் பெறும் நிலையால் அதிக விவாகரத்துகள் ஏற்படுவதுடன், அதனால் ஏற்படும் பெண்கள், பிள்ளைகளுடைய பாதிப்பினைக் குறைப்பதற்காக இந்த சபைகளில் குடும்பப் பிணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு நல்லிணக்கம் மற்றும் ஏனைய ஆதரவு செயற்பாடுகளுக்குட்படுத்தப்படும்.

நிகழ்வில்  08 பிரதேசங்களிலும் சேவையாற்றும் குடும்ப நல்லிணக்க சபை (FRB)  நிருவாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சேவையை வினைத்திறனுள்ளதாகவும் இலகுவானதாகவும் ஆக்க ஆவணப்படுத்தலுக்குத் தேவையான  கோவைகளும் படிவங்களும் பொறுப்பு வாய்ந்த அலுவலர்களிடம் கையளிக்கப்பட்டன.












SHARE

Author: verified_user

0 Comments: