மதுபோதையில் இருந்து எவ்வாறு மக்களை மீட்டெடுப்பது என்பது தொடர்பான - சமய தலைவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு.
சமூகத்தை, குடும்பத்தை மற்றும் நாட்டை மதுபோதையில் இருந்து எவ்வாறு மக்களை மீட்டெடுப்பது என்பது தொடர்பான சமய தலைவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வொன்று புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட ஹரித்தாஸ் எகட் நிறுவகத்தின் இயக்குனர் ஏ.ஜேசுதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வானது மட்டக்களப்பு கோட்டமுனையில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மது போதை பாவனை, புகைத்தல் பாவனை மற்றும் இதனால் ஏற்படும் நோய்த்தாக்கங்கள், போதைப் பாவனைக்கு அடிமையாகும் நபர்களை எவ்வாறு மீட்டெடுப்பது, என்பது தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், மதுபாவனையில் ஏற்படும் உளநல பாதிப்பு, மது பாவனையினால் ஏற்படும் விபத்துக்கள் போன்ற விடையங்கள் தொடர்பாகவும் இதனால் ஏற்படும் நோய்த்தாக்கத்தினை குறைக்கும் யுக்திகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
தற்கால சூழலில் சமூகத்தில் அதிக தாக்கம் செலுத்திவரும் மதுபோதையை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த செயலமர்வில் சமூகத்தை வழிப்படுத்திவரும் சர்வ மத தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன், சமய தலைவர்கள் ஊடாக மக்களை வழிப்படுத்தும் நோக்கிலேயே இச்செயலமர்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த செயலமர்விற்கு வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மது போதை புணர்வாழ்வு மையத்தின் பணிப்பாளரும் அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்பணி அன்டனி கியூபட் அடிகளார் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட எகட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், ஹரித்தாஸ் எகட் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான எஸ்.மைக்கல், ஐ.கிறிஸ்டி, ஏ.டி.சொலமன் மற்றும் எம்.யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment