9 Jul 2020

கொரிய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட வறுமை ஒழிப்புத்திட்டங்களை பார்வையிட இலங்கை வந்துள்ள கொரிய நாட்டு குழு மட்டக்களப்புக்கு விஜயம்.

SHARE
கொரிய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட வறுமை ஒழிப்புத்திட்டங்களை பார்வையிட இலங்கை வந்துள்ள  கொரிய நாட்டு குழு மட்டக்களப்புக்கு விஜயம்.
இலங்கை அரசாங்கமும் கொரிய அரசாங்கமும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய உலக உணவுத் திட்டத்தின் அங்கீகாரத்தில் சுமார் 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஐந்து மாவட்டங்களில்;  வறுமை ஒழிப்புத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்களின் சாத்திய செயல்பாடுகளை நேரில் கண்டறிய இலங்கை வந்துள்ள  கொரியநாட்டு; பிரதிநிதிகள்குழு செவ்வாய்கிழமை (07) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இக்குழுவினர் முதலில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இடம் பெற்ற விசேடகூட்டத்தில்  இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய இம்மாவட்ட தேவைகள் எதிர்காலத்தில் அமுல்படுத்த  தீர்மானித்துள்ள வாழ்வாதார திட்டங்களின்; பற்றியும் கலந்துரையாடினர்.

இதன் பின்னர் இந்த விசேட திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் பன்சேனை காஞ்சிரங்குடா பாவக்கொடிச்சேனை ஆகிய கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு  அங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட மற்றும் புதிதாக ஆரம்பிக்கவுள்ள திட்டங்களின் முன்னேற்றங்களையும் ஏனைய தேவைகளையும் அவ்வப்பகுதி மக்களிடமும் திணைக்கள அதிகாரிகளிடமும் கேட்டறிந்தும் கொண்டனர்.

இந்த களவிஜயத்தில் உலக உணவுதிட்டத்தின் வதிவிட பணிப்பாளர் திருமதி பிரெண்டா வேர்டன் கொய்கா, சர்வதேச தொண்டரமைப்பின் வதிவிட பணிப்பாளர் திருமதி யுன்ஹ_ வாகங், விவசாய அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சம்பிகா, இகிழக்கு மாகாணவிவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.ஐ ஹ_சைன், மட்டக்களப்பு பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, வவுணதீவு பிரதேசசெயலாளர் எஸ்.சுதாகரன் உலக உணவுத் திட்டத்தின் அரசபங்காளி  இணைப்பு உத்தியோகத்தர் முஸ்தபா நிஹ்மத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், உட்பட பலஅதிகாரிகள் பங்கேற்றனர்.  

தற்பொழுது துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த விசேட திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு, மொணராகல, மாத்தளை, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இலங்கை அரசாங்கத்தின் நிதி சுமார் 36 கோடி ரூபாவிலும் கொரிய நாட்டு அரசாங்கத்தின் உதவியில் சுமார் 108 கோடி ரூபாவிலுமாக மொத்தம் சுமார் 144 கோடி ரூபா செலவில் வறுமைக்  கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஜீவனோபாயம் சார்ந்த திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமைக் கோட்டின்கீழ் கூடுதலான மக்கள் வாழும் பிரதேசமான மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் 2019 ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்ட 10 கிராமங்களில் வறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஜீவனோபாயத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா  தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்திற்கு கடந்த வருடம் இப்பிரதேச செயலகப் பிரிவின் பன்சேனை, காஞ்சிரங்குடா, குறுஞ்சாமுனை, ஆகிய கிராமங்களும் இவ்வருடம் பாவக்கொடிச்சேனை, இலுப்படிச்சேனை, புதுமண்டபத்தடி, ஆகிய கிராமங்களும் அடுத்த வருடம் 2021இல் ஆயித்தியமலை வடக்கு, நெடியமடு, காந்திநகர் விளாவெட்டுவான் கிராமங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பத்மராஜா மேலும் தெரிவித்தார்.

இதுவரையில் இப்பிரதேச செயலாளர் பிரிவில் விவசாய செய்கைக்கு பிரயோசனமான சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நான்கு குடிநீர் கிணறுகளும் நிறுவப் பட்டுள்ளதுடன் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
















SHARE

Author: verified_user

0 Comments: