(ஆர்.ஹஸன்)
நாட்டின் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் அபிவிருத்திக்காவும் - பொருளாதார முன்னேற்றத்துக்காவும் மேற்கொள்ளும் அரும்பெரும் பணிகளுக்கு கிழக்கு மாகாண மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எனவும் தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாhற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது…
கிழக்கு மாகாண சபை அதன் பதவிக் காலம் நிறைவடைந்ததும் கலைக்கப்படும். எக்காரணம் கொண்டும் அதனைப் பிற்போட இடமளிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. எனவே, கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வெகு விரைவில் நடைபெறும்.
அதற்கான தயார் படுத்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எமது கட்சிக்குள் இருவேறு அணிகள் வெவ்வேறாக செயற்பட்டாலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாங்கள் ஒன்றிணைந்தே செயற்படுவோம். கிழக்கு மாகாணத்தில் நாங்கள் இணைந்து செயலாற்றினால் மாத்திரமே மீண்டும் கிழக்கின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்.
ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை இரண்டு முறைக் கைப்பற்றியிருந்தது. தற்போதும், அதிகமான ஆசனங்களை தம்வசம் வைத்திருந்தும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்கள் மாத்திரமே வாக்களிப்பார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு முஸ்லிம்கள் மாத்திரமே வாக்களிப்பார்கள். ஆனால், தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூன்று இனத்தவர்களது ஆதரவினையும் ஐ.ம.சு.முன்னணியே பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தி கிழக்கின் ஆட்சியை ஐ.ம.சு.மு. கைப்பற்றும்.
நாட்டில் நல்லாட்சி என்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் செய்கின்ற பணிகளுக்கு கிழக்கு மாகாண மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும். எனவே, கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.மு. கைப்பற்றுமாயின் கிழக்கு மாகாணம் மேலும் அபிவிருத்தியடையும் என்றார்.
0 Comments:
Post a Comment