மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்குடா கடலில் நீராடச் சென்ற சமயம் கடலில் மூழ்கி காணாமல்போன இரு
சகோதரர்களில் ஒருவர் திங்கட்கிழமை காலை (செப்ரெம்பெர் 19, 2016) கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் ஷண்முகம் சதீஷ்குமார் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராகும்.
இவரது இளைய சகோதரரான சுரேஷ்குமார் (வயது 18) என்பவர் கடற்படைச் சுழியோடிகள், மற்றும் மீனவர்களால் இன்னமும் தேடப்பட்டுவருகின்றார்.
கல்குடா விஷ்ணுகோயில் குறுக்கு வீதி பட்டியடியைச் சேர்ந்த மேற்படி இரு சகோதரர்களும் மற்றும் மூன்று நண்பர்களுமாக மொத்தம் 5 பேர் பிறந்த தினத்தை கடற்கரையில் கொண்டாடுவதற்காக பாசிக்குடா கடலுக்குச் சென்று அவர்களில் நால்வர் நீராடிக் கொண்டிருந்த சமயம்; சுரேஷ்குமார் என்பவர் கடலலையால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட, சகோதரனான சதீஷ்குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவ்வேளையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன் பின்னர் மற்றைய இரு நண்பர்களும் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடலில் மூழ்கி காப்பாற்றப்பட்ட கல்குடா நாமகள் வித்தியாலய வீதியைச் சேர்ந்த மாணவர்களான கங்கேஸ்வரன் டிலக்சுமன் (வயது 16), மற்றும் அருள்தரன் ரஜிந்தன் (வயது 16) ஆகியோர் தற்சமயம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்களது பிள்ளைகள் கடலில் மூழ்கி இறந்துள்ள தகவலை அறிந்த பெற்றோரான கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ஷண்முகம் (வயது 49) கணபதிப்;பிள்ளை யோகலெட்சுமி (வயது 46) ஆகிய இருவரும் துக்கம் தாளாது திடீர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை காணாமல் போன தனது சகோதரர்களில் ஒருவர் மீட்கப்பட்டு கடற்கரையில் உடலம் வைக்கப்பட்டிருப்பதை காண்பதற்காக அங்கு விரைந்து வந்த சகோதரியான தினேஷ்வரி (வயது 27) என்பவர் மயங்கி விழுந்த நிலையில் உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
0 Comments:
Post a Comment