(பழுகாமம் நிருபர்)
(திக்கோடை தும்பாலையில் இருந்து ஒரு நேரடி றிப்போர்ட்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான போரதீவுப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடை கிராமத்தின் பிரிவான தும்பாலைப் பிரிவானது அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமாகும். இங்கு காட்டுயானைகளின் அட்டகாசம் நிறைந்தது மட்டுல்லாமல் அண்மையில் காட்டுயானை தாக்கி மூன்று பேர் மரணித்த சம்பவமும் இந்த கிராமத்திலே இடம்பெற்ற அவலச் செய்தியாகும்.
மொத்தமாக இந்த கிராமத்தில் 485 குடும்பங்கள் வாழ்ந்தாலும் கூட தும்பாலைப் பிரிவில் 89 குடும்ங்கள் வாழ்ந்து வருகின்றனர். திக்கோடை பிரதான வீதியில் இருந்து சுமார் மூன்றரை கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதுதான் இந்த குக்கிராமம்.
“இளமைமையில் கல்வி சிலையில் எழுத்து” என்னும் முதுமொழிக்கு அமைவாக அங்கு வாழ்ந்து வரும் சிறுவர்கள் பலர் இளமைக் கல்வியினைத் தொடர்வதற்கு பாலமுருகன் பாலர் பாடசாலை உள்ள போதும் கூட அது அடிப்படை வசதிகளற்ற நிலையில் காட்சி தருகின்றது. அங்கே கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வியினை தொடர்கின்றார்கள்.
அவ்வாறு அவர்கள் திக்கோடை கிராமத்திற்கு வருவதென்றாலும் கூட மூன்றரை கிலோ மீற்றர் காடுகள் நிரம்பிய காட்டுயானைகளின் அச்சத்தின் மத்தியில் தான் அங்கு கால்நடையாக சென்று கல்வி பயில வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.
அங்குள்ள பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில்
“இந்த பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களின் பெற்றோர்களும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்க்கையை நடாத்தும் மக்கள் தான். அவர்களும் என்ன செய்வார்கள்? இங்கு 26 மாணவர்கள் கல்விகற்கின்றனர். இவர்கள் அனைவரும் எதிர்கால தலைவர்களாக வரவேண்டுமாக இருந்தால் சிறுபராயத்திலே அடிப்படைக் கல்வி ஊட்டப்படவேண்டும். அதற்காக இந்த பாடசாலையின் பௌதீக வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இங்கே தேர்தல் திருவிழாக்கள் வந்தால் அரசியல் வேட்பாளர்கள் வருவார்கள் வந்து வீரப்பேச்சு பேசி வாக்குகளை பெற்று வெற்றியின் பின் யாரும் எம்மை கடைக்கண்ணாலும் கூட பார்க்கமாட்டார்கள்.
ஆகவே இந்த பாலர் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பன இனியாவது இந்த பாடசாலையின் நிலை அறிந்து உதவிகள் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” எனத் தெரிவித்தார்கள்.
சிறார்களின் எதிர்கால கல்வியின் நோக்கத்தினைக்கொண்டு முடிந்தவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment