9 Aug 2016

யானைத்தாக்குதலினால் மக்கள் இடம்பெயரும் நிலை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை, பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களில்
5 வருடத்திற்கு மேலாக காட்டுயானைகளால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அழிவுகளின் காரணமாக இப்பகுதிமக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் யானைத்தாக்குதல் தொடர்பில் செவ்வாய்க் கிழமை (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர்; இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு இன்று வரையும் 52க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 32 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து ஏனையோர் காயமடைந்துள்ளனர். சுமார் 300 தடவைக்கு மேல் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 400 இற்கு மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன. 800 இற்கு மேற்பட்ட தென்னை, வாழை, மா, பலா போன்ற பயன்தரு மரங்கள் அழிக்கப்;பட்;டுள்ளது. யானை வேலிகள் அமைக்கப்பட்டும் மாதம் மொருதடவை வெடிகள் வழங்கியும், 20 பேர் கொண்ட குழு 3 அலுவலகங்களை அமைத்தும், மூன்று வாகனங்களை வைத்துக் கொண்டும் வனவிலங்கு திணைக்களம் இயங்கி வருகிறது. இவர்கள் திணக்கள உத்தியோகத்தர்கள் இவர்களுக்கு யானை துரத்துவது கடமையை அல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 15 இடங்களில் யானைகள் தினமும் மாலை 5 மணி தொடக்கம் அடுத்த நாள் காலை வரை நடமாடும் நிலையில் 3 அலுவலகத்தை அமைத்து அவர்கள் எந்த பணியும் செய்ய முடியாது. இவர்களுக்கான அலுவலகம் வாகன தேவைகள் ஆட்பலம் ஏனைய தேவையான பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.  

உடன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் யானை துரத்துவதற்கான விசேட குழு அமைக்கப்பட்டால் மட்டுமே ஓரளவுக்கு இதன் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியும். தற்சமயம் வேளாண்மை அறுவடை முடிவடைந்துள்ளதால் யானைக்கு உணவு இல்லாத நிலையில் மக்கள் குடியிருப்பு இடங்களுக்கு சென்று ஒருவராத்திற்குள் 15குடியிருப்பு இடங்களை முற்றாகவே நாசமாக்கியுள்ளது. வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரவெட்டியாறு, சிப்பிமடு, இருநூறுவில், பாவற்கொடிச்சேனை, கண்ணகிபுரம், ரொச்சண்டகல், கோழியனாறு, நல்லதண்ணியோடை, கண்டியநாறு, அடைச்சல், பன்சேனை, சில்லிக்கொடியாறு போன்ற கிராமங்களில் 5 இடங்களில் யானைகளின் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

வனவிலங்கு திணைக்கள உத்தியோகத்தரினால் அவர்களின் திட்டங்களையும், பலத்தையும், வளங்களையும் அதிகரிக்காமல் யானைகளை இவர்களால் துரத்தமுடியாது. இவை அனைத்து மக்களின் இடம்பெயர்வுகளுக்கும், இப்பிரதேச மக்களின் வறுமைக்கும் இந்த திணைக்கள தலைமை அதிகாரிகளே பொறுப்பாகும். அமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த முடியாத திணைக்கள செயலாளர், பணிப்பாளர்கள், ஆணையாளர்களின் எந்த கருத்தையும் மக்கள் நம்பப்போவதில்லை.

இடம்பெயர்வதற்கான சூழ்நிலையில் மக்கள் இருப்பதினால் குறிப்பாக விவசாய செய்கை முற்றாக அழிக்கப்பட்டு இனிமேலும் செய்யக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் ஒருநேர உணவுக்குகூட வழியின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கிராமசேவையாளர்கள், பிரதேசசெயலாளர்கள், அரச அதிபர் அவசரகால நிலைமையை குறிப்பிட்டு கிராமங்களுக்கு பிரகடனப்படுத்தி சுமார் 120 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு எல்லைப்புறங்களில் திணைக்கள உத்தியோகத்தர்கள் 24 மணிநேர சேவைக்கு அமர்த்தினால் மட்டுமே குறிப்பிட்ட இடங்களில் இடம்பெறும் யானைதாக்குதலை தவிர்க்க முடியும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: