18 Aug 2016

பலமான காற்றில் மின்கம்பிகள் உராய்ந்து பாரிய தீ, மோட்டார் சைக்கிள், பனைமரங்கள் கருகி நாசம்

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்;ட்
16, 2016) பிற்பகலளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளொன்றும் பல பனைமரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

தற்சமயம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வீசும் பலமான தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் (பிரதேச வழக்கின்படி கச்சான் காற்று) காரணமாக வீதியோரத்தில் நிறுவப்பட்டுள்ள  மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றிக் கொண்டு அறுந்து வீதியோரத்தில் வரிசையாக நின்றிருந்த பனை மரங்கள் மீது விழுந்துள்ளன.

இதனால் காய்ந்து போயிருந்த பனை மட்டைகளில் இலகுவாகத் தீப்பற்றிக் கொண்டதோடு பனை மரங்களின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.

சம்பவத்தைக் கேள்வியுற்று உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினர், தீயணைப்புப் பிரிவு, மற்றும் மின்சார சபை ஆகியவற்றை அழைப்பித்ததோடு தீ வீடுகளுக்கு பரவாமல் அணைப்பதிலும் ஈடுபடுட்டனர்.

தீ தொடர்ந்தும் பரவாமல் தடுத்ததன் மூலம் பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் இலங்கை மின்சார சபையினர் ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: