மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தில் வயோதிபரின் சடலம் நுளம்பு வலைக்குள் உறங்கியவாறு இருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயதான சிற்றம்பலம் சிதம்பரப்பிள்ளை என்பரின் சடலமே திங்கள் பிற்பகல் மீட்கப்பட்டது.
இவரது பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்ற அதேவேளை இவர் தொடர்ந்து தான் வாழ்ந்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.
மார்ச் மாதம் 03ஆம் திகதியிலிருந்து இவருடனான தொலைபேசித் தொடர்பு இல்லாமற் போனதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன் காரணமாக தாங்கள் அவர் வசித்த வீட்டுக்கு வந்து தேடிப் பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்த உறவினர்கள் அவ்வேளையில் வீட்டின் உள்ளே இருந்து வாடை வீசியதனால் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்தபோது நுளம்பு வலைக்குள் படுத்துறங்கியவாறு அவர் சடலமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment