18 Jan 2016

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி

SHARE
திருமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வடக்கு கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நினைவு அஞ்சலி நிகழ்வில், சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள், நினைவுப் பேருரை, உதவிகள் வழங்கல், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்பட வெளியீடு ஆகியனவும் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில், இந்நினைவு அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு சம்மேளனத்தின் தலைவர் தேவஅதிரன் தெரிவித்தார்
இதில் திருகோணமலை ஊடகவியலாளர்களான அச்சுதன், முகமட் சாலி, லேக் கவுஸ் ஆசிரியர் பீட பிரதானி சமன் வகாராச்சி, யாழ்ப்பாணம் தயாபரன், அம்பாறை மாவட்ட செய்தியாளர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றுவார்கள்.

1969 டிசம்பர் 12ஆம் திகதி குறுமன்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலை உவர்மலையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றிலும் பயின்றார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் பணியில் சேர்ந்தார்.
திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: