16 Jun 2015

சித்தாண்டி காளி கோவில் தீ மிதிப்பு உற்சவம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 52 ஆவது வருடாந்த திருச்சடங்கு கடந்த  புதன்கிழமை (10) மடைப்பெட்டி எழுந்தருளி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அம்மனின் தீ மிதிப்பு நிறைவடைந்தது.
சித்தாண்டி மாவடிவேம்பில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனின் தீ மிதிப்பு மிகவும்  தெய்வீக தன்மையுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வது வழமை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அன்னையின் தீ மிதிப்பில் மேலும் அதிகமான பக்தர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலர் கலந்துகொண்டு தங்களின் நேர்த்திக்கடன்களை நிவர்த்திசெய்தனர்.

ஆலயத்தின் திருச்சடங்கு தினங்களில் ஆலய பரிபாலன சபையினரால் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்களுக்கு பல்வேறுபட்ட ஒழுங்கமைப்புகளை மேற்கொள்வதுடன் தீ மிதிப்புக்கென விசேட நடைமுறைகளை ஒழுங்கு செய்து பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது.

தேவாதிகள் மற்றும் பூசாரிகள் புடைசூழ அன்னையவளின் தீ மிதிப்பு தெய்வீக தன்மையுடன் நடைபெறும் அதேவேளை தேவாதிகளுக்கு சாட்டை மற்றும் மடை ஒப்புக்கொடுத்தல் என்பனவும் இங்கு விசேடமாக நடைபெற்றது. ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்திற்குகென விசேடமாக அலங்காரிக்கப்பட்ட தோரணைகள் இவ் வருடம் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஆலய தீ மிதிப்பு நாளாகிய இன்று வருடாந்தம் விசுவ குல மக்களினால் வழங்கிவரும் தாக சாந்தி பந்தல் மூலம் குளிர்பானம் என்பன பக்தர்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: