-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
இப்பொழுது ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்தில் விளையாடுகின்றவர்களாகவும்
எந்த நேரத்திலும் வெட்டப்படுகின்ற காய்களாகவும் சிறுபான்மைச் சமூகங்கள்
இருந்துவிடக் கூடாது என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர்
சேகுதாவூத் தெரிவித்தார்.
பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச
செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில்
செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அபிவிருத்தியோடு சேர்த்து மக்களுக்கு எதிர்காலம் பற்றிய புரிதலையும்
ஏற்படுத்தவேண்டும். இலங்கை மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் எவ்வாறு
வளர்ச்சியடையவேண்டும் என்பது பற்றியும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
கொடுத்து எடுக்கின்ற ஒரு விடயம் என்பது அது அரசியலுக்கும் பொருந்தும்.
நாங்கள் எதுவும் தரமாட்டோம். நீங்கள் மட்டுமே
தந்துகொண்டிருக்கவேண்டும்
என்பது எமது அரசியல் கலாசாரத்துடன் ஊறிப்போன விடயம். இது பற்றியும் நாம்
ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இது அரசியல் சதுரங்கம் விளையாடுகின்ற காலமாக இருக்கின்றது. அடுத்த வருட
முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகின்ற வகையில்,
அந்தத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் சதுரங்கப்பலகை தயாராகிவிட்டது.
சிறுபான்மை மக்கள் இந்தச் சதுரங்கத்தில் விளையாடுகின்றவர்களாக
இருந்துவிடக்கூடாது. அதேநேரம், வெட்டப்படுகின்ற சதுரங்கக் காய்களாகவும்
அகப்பட்டுவிடக்கூடாது.
தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளராக எந்தச் சிறுபான்மை வேட்பாளரும்
இருக்கப்போவதில்லை. அதேநேரம், அடுத்த 06 வருடங்களுக்கான ஆட்சியில்
இடம்பெறக்கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியில் தங்களையும் சேர்த்து
அபிவிருத்தி செய்கின்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றதொரு தகைமையை
சிறுபான்மையினர் பெற்றுக்கொள்வதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த வகையில், இப்பொழுது ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்தில்
சிறுபான்மையினர் விளையாடுகின்றவர்களாகவும் இருக்கமுடியாது. எந்த
நேரத்திலும் வெட்டப்படுகின்ற காய்களாகவும் சிறுபான்மைச் சமூகங்கள்
இருந்துவிடக்கூடாது. ஆனால், கட்டாயம் சதுரங்கம் விளையாடத் தெரிந்த
பார்வையாளர்களாக இருக்கவேண்டும்.
ஏனெனில், பார்வையாளர்களுக்குத்தான் சதுரங்கத்தில் எந்தத் தரப்பு பிழை
விடுகின்றது என்பது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. அதேபோன்று, அவர்கள்
செய்கின்ற நல்லது, கெட்டது எல்லாமே தெரிந்திருக்கும். சிறுபான்மைச்
சமூகங்களின் மீது அக்கறை கொண்டு அர்ப்பணித்துச் செயற்பட்டுவருகின்ற
பிரதிநிதி என்கின்ற வகையில் நான் இதை இந்த சிறுபான்மைச் சமூகங்களுக்குச்
சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
இப்பொழுது அபிவிருத்திக் கனவுகள் நனவாக மாறிவருகின்றன. இந்த வருடத்தின்
அபிவிருத்தித்திட்டங்களை முடிப்பதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல, நாடு முழுவதும் ஏற்பட்ட
பிரச்சினையே.
கடந்த வருடங்களில் எங்களுடைய நிதி ஒதுக்கீடுகள் இலங்கை முழுவதும் செலவு
செய்யப்பட்டு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதில் பின்னடைவுகள்
ஏற்பட்டிருந்தன.
இந்த வருடத்தில் என்ன காரணம் கொண்டும் அபிவிருத்தித் திட்டங்களைப்
பிற்போடவேண்டாம் என்றும் அவ்வாறு செய்துவிட்டு அபிவிருத்தித்
திட்டங்களுக்கான கொடுப்பனவை அடுத்த வருடத்தில் கேட்கவேண்டாம் என்றும்
நாங்கள் அரச நிர்வாகத்தினருக்கு மிகக் கண்டிப்பான உத்தரவை
பிறப்பித்துள்ளோம்.
ஒரு சதத்தைக்கூட இந்த வருடத்தின் நிலுவைப்பாக்கியாக வழங்கமாட்டோம்
என்பதில் இறுக்கமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம்
செய்துமுடிக்கப்பட்ட வேலைக்காக அடுத்த வருடம் பணம் கோரமுடியாது. இது
விடயமாக மிகத் தெளிவான உத்தரவு அரச நிர்வாகத்தினருக்கு ஏற்கெனவே
பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வேலைகளுக்குமான செலவு டிசெம்பர் மாதம் 31ஆம்
திகதிக்கு முன் செலவளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்த நாட்டில் அபிவிருத்தி யுகம் என்பது யுத்தத்துக்கு பிற்பட்ட காலமே.
ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட, கூடுதலான வேலைத்திட்டங்கள்
இடம்பெற்றுவருகின்றன.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
அபிவிருத்தி செய்வதற்கு எமது வடக்கு, கிழக்குப் பகுதிகளை அபிவிருத்தி
செய்வதற்காக ஜனாதிபதி ஒப்பீட்டளவில் கூடுதலான நிதியை
ஒதுக்கியிருக்கின்றார். இதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளை விட
அபிவிருத்திக்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதலான நிதி
வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில், ஏறாவூர் நகரப் பகுதிக்கும் கணிசமான
நிதி கிடைத்திருக்கின்றது. இதற்காக, ஜனாதிபதிக்கும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு நாம்
கடமைப்பட்டுள்ளோம்.’ என்றார்.
0 Comments:
Post a Comment