30 Apr 2023

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சித்திரை வசந்தம் - 2023 மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றது.

SHARE


தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து பெருமையுடன் நடாத்தும் சித்திரை வசந்தம் - 2023 இன்று காலை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  இன்று காலை முதல் இரவு 11.00 மணிவரை பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் மாலை நேர இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ள நிலையில், ஆரம்ப நிகழ்வானது காலை  6.30 மணியளிவில் காந்திப்பூங்காவில் இருந்து இருபாலாருக்குமான சைக்கில் ஓட்டமும் மரதன் ஓட்டமும், காலை 8.30 மணிக்கு முகத்துவாரத்தில் இருந்து மட்டக்களப்பு நுழைவாயில் வரையிலான தோணி ஓட்டமும், நீச்சல் அஞ்சல் ஓட்டம் (கலப்பு), பிற்பகல் 2 மணி  தொடக்கம் வழுக்கு மரம் ஏறுதல், தலையனைச்சமர், முட்டி உடைத்தல் புதுவருட அழகன் அழகி போட்டி போன்ற சுவாரஸ்யம் நிறைந்த போட்டி நிகழ்வுகள் தற்போது வரை இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு உள்ளூர் வியாபார முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்பனையும் பிரதம அதிதிகளினால்  திறந்துவைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய உணவு கூடங்கள் மற்றும் உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சி மற்றும் விற்பனை கூடங்கள் என்பனவும் இடம்பெற்றுவருகின்றது.

கிடுகு இழைத்தல் (பெண்), கோலம் போடுதல் (பெண்), சைக்கிள் மெதுவோட்டம் (50 வயதுக்கு மேல் ஆண்), யாணைக்கு கண் வைத்தல் (சிறுவர் சிறுமியர் 10 – 15 வயது), சாக்கோட்டம் (10 – 15 வயது), பெண்களுக்கான தேங்காய் துருவுதல் (துருவிலை மட்டும் கொண்டுவருதல் வேண்டும்), தேசிக்காய் சமநிலை ஓட்டம் (10 தொடக்கம் 15 வயது - தேசிக்காய் மற்றும் கரண்டி என்பன வழங்கப்படும்), ஊசிக்கு நூல் கோர்த்தல் (ஆண் / பெண்), போத்தலில் நீர் நிரப்புதல் (10-15 வயது), மிட்டாய் ஓட்டம் (10 வயதுக்குட்பட்ட சிறார்கள்), பலூண் உடைத்தல் (10-15 வயது), சங்கீதக் கதிரை (பெண் உத்தியோகத்தர்கள்), தொப்பி மாற்றுதல் (ஆண் உத்தியோகத்தர்கள்), கயிறு இழுத்தல் - பொலிஸ் மற்றும் இராணுவம் (ஆண்) பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகம் (பெண்), கிராமியப்பாடல் (35 வயதுக்கு மேற்பட்டோர்), புத்தாண்டு அழகன், அழகி போட்டிகள்  போன்றவை மாலை நேர விளையாட்டுக்களாக இடம்பெற்றதனைத் தொடர்ந்து  பரிசளிப்பு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மட்டுநகர் சுப்பர் சங்கீர்த் இசைக்குழு வழங்கும் அட்டகாசமான இசை நிகழ்ச்சி என பல்வேறுபட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன்  மாவட்ட செயலக சித்திரை வசந்தம் நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெற்று நிறைவுறவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க பணப்பரிசில்களும் பரிசுப்பொதிகளும்  வழங்கப்படவுள்ளதுடன், இலங்கையில் புகழ்பூத்த பாடகர் மகிந்தகுமார் உள்ளிட்ட கலைஞர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள  இசை மழையில் நனைந்திடவும் சித்திரை வசந்தம் ஏற்பாட்டுக்குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

"சித்திரை வசந்தம் - 2023" நிகழ்விற்கு பிரதான அனுசரணையாளர்களாக மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் என்பனவும், இணை அனுசரணையாளர்களாக அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் என்பன மாவட்ட செயலகத்துடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.மகேசன், முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர்களான சீ.புண்ணியமூத்தி, எம்.உதயகுமார், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர்  திலீப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (Dig) உஜித் என்.பீ.லியனகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (மட்டக்களப்பு - I) எம்.ஏ.கே.பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சரத்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மாவட்ட செயலக உத்தியோகத்ர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், கோட்டமுனை விளையாட்டு கழக பிரதிநிதிகள், உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவான போட்டியாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: