16 Feb 2023

மட்டக்களப்பு சிறைச்சாலையின் திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா.

SHARE

மட்டக்களப்பு சிறைச்சாலையின் திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை

திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா புதன்கிழமை (15.02.2023)  இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து

மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குறித்த 23 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பண்ணையில் கடந்த இரண்டு வருடங்களாக வேளாண்மையும் ஏனைய பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டுவந்த நிலையில், கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் பசுமை விவசாயப் புரட்சி திட்டத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், சிறைச்சாலை திணைக்களத்தின் வழங்கள் பிரிவின் ஆணையாளரின் வழிகாட்டல்களுக்கு அமைவாக

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரனின் தலைமையில் இப்பண்ணையில் 10 ஏக்கரில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடை நிகழ்வு இதன்போது சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பா வகை நெல்லினம் இம்முறை விதைக்கப்பட்டிருந்ததுடன், சிறந்த விளைச்சலும் கிடைத்துள்ளது.   

இச் செயற்பாடானது கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பண்ணையில் இவ்வாறாக மேற்கொள்ளப்படும் நஞ்சற்ற வேளாண்மை ஊடாக உற்பத்தி செய்யப்படும் நெல்லினையும் ஏனைய பயிர்வகை ஊடாக பெறப்படுகின்ற விளைச்சல்களையும் சிறைச்சாலையில் இருக்கும் சிறைக்கைதிகளின் உணவிற்காக ஏற்கனவே பயன்படுத்தியதுடன் எஞ்சிய விளைச்சல்களை ஏனைய சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தகுந்த முறையில் சமப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள குறித்த பண்ணையின் ஊடாக இம்முறை உற்பத்திகள் கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதென்றும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக இவ்வான வயற்காணிகளிலும் மற்றும் தரிசுநிலமாக காணப்படும் வயல்காணிகளிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நாட்டிற்கு நன்மையளிக்கும் என்றும் அத்தியட்சகர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பதில் பிரதான ஜெயிலர், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை காவலர்கள், ஊழியர்கள் மற்றும் புனர்வாழ்வு கைதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: