7 Dec 2022

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்கள் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் கவனத்தைச் செலுத்த வேண்டும் - ஜனா MP

SHARE

இன்று நாம் கமத்தொழில் அமைச்சு, நீர்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். ஒன்றோடொன்று தொடர்புடைய மிக முக்கியமான அமைச்சுகள் இவைகளாகும். என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…

எனது உரையினை ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத்திட்ட உரையின் வாசகங்கள் சிலவற்றுடன் இணைத்து ஆரம்பிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது நாடு குறித்து எம்மால் திருப்திப்படுத்த முடியுமா? நாம் எங்கே தவறுவிட்டோம். தவறிய இடம் எது என்று அவர், வினவினார்.

அது மாத்திரமல்ல அப்போது ஆசியாவில் யப்பானுக்கு அடுத்த படியாக தனிநபர் வருமானத்தில் இரண்டாம் இடத்தில் நமது நாடு இருந்ததாகவும் கூறினார்.

அதே போன்று ‘இரந்து பெற்று விருந்து உண்ணும்’ போக்கே எமது போக்காக இதுவரை இருந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். இது உண்மையை உணர்த்துகின்ற உரையாகவே பார்க்கிறேன். ஆனால் இவற்றிற்கு யார் பொறுப்பு. மக்களா, இல்லை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறிமாறி வந்த அரசாங்கங்களா என்பதை எமது ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூற மறந்துவிட்டாரா, இல்லை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாது.

எமது நாடு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டது. அதனால், மீன்பிடித்துறையும் கமத்தொழிலும் எமது மக்களது பிரதான வருமான மார்க்கமாகும். ஆனால், நாம் எமது விவசாயம், மீன்பிடி ஆகியவற்றில் எமது முழு இயலளவையும் பயன்படுத்தியிருக்கின்றோமா? அல்லது பயன்படுத்துகிறோமா என்றால், கிடைக்கும் பதில் இல்லை என்பதே ஆகும்.  

சின்னஞ்சிறிய தீவுக் கூட்டங்களைக் கொண்ட மாலை தீவு தனது கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றது. நாம் நாற்புறமும் கடல்  சூழ்ந்திருந்தும் பற்றாக்குறையான அன்னியச் செலாவணியைச் செலவழித்து வேறு நாடுகளிலிருந்து ரின் மீன், மாசி, கருவாடு என்பவற்றை இறக்குமதி செய்கிறோம். இதே போலவே விவசாயத்துறைக்கும் போதுமான நிலவளம், நீர்வளம்;, அதற்கு உகந்த காலநிலை இருந்தும் நாம் அரிசிக்காக அயல்நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றோம். இந்நிலைமைக்கு யார் காரணம்.

பராக்கிரமபாகு மன்னன் எமது நாட்டு நீர்வளம் குறித்து கூறிய கூற்று ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘எமது நாட்டின் நதிகளினது நீரில் ஒரு சொட்டு நீர் தானும் கடலுக்குச் செல்வதைத் தடுத்து கமத்தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று சூழுரைத்தார். அதனைச் செயல்படுத்தியும் காட்டினார். குளம் கட்டி வளம் பெருக்கி  எமது நாட்டின் விவசாயத் துறையை தன்னிறைவடைந்த நாடாக மாற்றினார்.

அன்று பராக்கிரமபாகு மன்னனால் முடியுமாக இருந்தது  இன்று ஏன், எம்மால் முடியவில்லை என்று ஆட்சியாளர்கள் உங்களது மனச்சாட்சியிடம் வினாவியுள்ளீர்களா? பராக்கிரமபாகு மன்னன் நாட்டையும், தன் நாட்டு  மக்களையும் உளமார நேசித்தார். அதன் விளைவுதான் அவரது செயலில் இருந்தது. உங்களைப் போன்று போலித் தேசியவாதியாக பராக்கிரமபாகு மன்னன் இருக்கவில்லை. பராக்கிரமபாகு மன்னன் மாத்திரமல்ல நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும் நாட்டின் நீர்வளத்தை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து விவசாயத் துறையில் பூரண வெற்றி கண்டனர். வடக்கு, கிழக்கு வடமத்தி, வட மேற்கு என்று அனைத்த மாகாணங்களிலும் இருக்கும் குளங்கள் யாவும் மன்னர்கள் காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளங்களே ஆகும். அப்போது ஊழல், இலஞ்சம், கொள்ளை என்பன இருக்கவில்லை. அதனால் செயற்றிட்டம் சிறப்பாக இருந்தது.  ஆனால், அவர்களால் முறையாகப் பேணப்பட்ட நீர் முகாமைத்துவத்தைக் கூட எம்மால் முறையாகச் செய்ய முடியவில்லை. மழைக்காலத்தில் குளங்களின் வான் கதவுகளைத் திறக்கின்றோம். நீர் வடிந்தோடியதும் வான்கதவுகளைப் பூட்டுகின்றோம். இறுதியில் பாசனத்துக்கு நீரில்லை. மழை வந்தால் வான் கதவைத் திறந்து மழை நின்றவுடன் வான் கதவைப் பூட்டுவதற்கு ஒரு அமைச்சு, ஒரு அரசாங்கம் தேவையா?

எம்மால் முறையாக நீர் முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்குமானால் தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக நமது நாடு மிளிர்ந்திருக்கும்.

ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், குறிப்பாக இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையானது நலிவுற்று, நோயளி நிலையில் இருந்த விவசாயத்துறையினை சமாதி கட்டிய துறையாக மாற்றிவிட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுமையை புழுவுயு புழு ர்ழுஆநு எனும் அறகலயவிற்கு ஆதார சுருதியாகியது. இதனால் கோட்டா ஜனாதிபதி பதவியை இழந்தது மாத்திரமல்ல, பிரதமர் தனது பதவியை இழக்க வேண்டியும், நிதி அமைச்சர் நாடு கடக்கவும் காரணமாகியது.

எமது விவசாயத்துறையை, மீன்பிடித்துறையை, நீர்ப்பாசனத் துறையை இன்றைய சரிவிலிருந்து மீட்டு கடந்த மன்னராட்சிக் காலங்கள் போல தன்னிறைவு அடையக்கூடிய வாய்ப்பு இன்னமும் குறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கு உங்களுக்கு உண்மையான அர்ப்பணிப்பும் உண்மையான தேசாபிமானமும் வேண்டும். கமிசன், தரகுப்பணம், இலஞ்சம் என்பவற்றையே இலக்கு வைத்துள்ள உங்களால், மக்களை உசுப்பேற்றுவதற்கு மாத்திரம் போலித் தேசியவாதம் பேசும் உங்களால் இதனை ஏற்படுத்த முடியாது என்பதை இந்த உயரியசபையில்  மிகுந்த கவலையுடன், பதிவு செய்கின்றேன்.

நாட்டில் இவ்வளவு அக்கப்போர் நடைபெறும் இன்றைய சூழ் நிலையிலும் கூட பல துறைகளில் கமிசன்களும், தரகுப் பணங்களும் இடம்பெறுவதாக இந்த உயரிய சபையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை வெறுமனே புறந்தள்ளி ஒதுக்கிவிடாதீர்கள் இன்னமும் இவை இப்படிய நடைபெற்றால் எப்படி நாம் இத்துறைகளில் தன்னிறைவடைய முடியும்.

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் கமத்தொழில் துறையில் பாவனையிலுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் இரு போகப் பயிர்ச்செய்கைக்கு உரிய நிலங்களாகும். கடந்த கால இரசாயன உரக் கொள்கையினால் எமது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது தங்க ஆபரணங்களை தனியாரிடமோ, வங்கிகளிடமோ, அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து விவசாயத்துறையில் முதலிட்டு அறுவடையின் போது அவற்றை மீட்டெடுத்து மீணடும் முதலீட்டுக்காக அவற்றைப் பயன்படுத்துவதே வழக்கமாகும்.

ஆனால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தாம் பெற்ற கடனையோ, தாம் அடகு வைத்த தம்முடைய தங்க நகைகளையோ மீளப் பெற முடியாது உள்ளனர். நமது நாட்டின் நிலைதான் நமது நாட்டு மக்களுக்கும். நமது நாடு தாம் பெற்ற கடனை எவ்வாறு மீளச் செலுத்த முடியாதுள்ளதோ அவ்வாறே தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது, தாம் அடகு வைத்த நகைகளை மீளப் பெறமுடியாது. அனைத்தையும் இழந்து பொருளாதார நிலையில் அநாதையாகியுள்ளனர் நம் மக்கள்.

எனினும் தற்போது உரக் கொள்கைளில் தளர்வு ஏற்பட்டு இரசாயன உர விநியோகம் நடைபெறுகின்றது. ஒரு அந்தர் இரசாயன உரத்தினைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயி பத்தாயிரம் ரூபாவுக்கும் சற்றுக் கூடுதலாக செலவு செய்யவேண்டியுள்ளது. இந்த உர விநியோகத்தில் ஆங்காங்கே ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலும் இந்த உர விநியோகக் கொள்கையை செயற்படுத்திய அமைச்சரையும், அரசையும் நான் பாராட்டாவிட்டாலும் தட்டிக் கொடுக்கின்றேன். இன்னமும் திறம்படச் செயற்படுங்கள் உங்களைப் பாராட்டுகிறேன்.

இதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்கள், சிறிய குளங்கள் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். நான் முன்பு கூறியது போல நீர்ப்பாசன அமைச்சில் முறையான நீர் முகாமைத்துவக் கொள்கைக்கான திட்டமிடல் செயற்பாடுகள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். எமது நாட்டில், பொங்கிப் பிரவாகித்து ஆர்ப்பரித்துவரும் நதிகளின் நீர் அனைத்தும்  பாசனத் துறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வெறுமனே நதிகள் கடலில் கலப்பதுதான் நியதி என்ற பத்தாம் பசிலித்தனமான, கதைகளை உதறி எறிந்து நீர்ப்பாசன முகாமைத்துவத்தை சிறப்பான முறையில் கடைப்பிடிப்பீர்களாக இருந்தால் நிச்சயம் நாம் தென்னாசியாவின் நெற் களஞ்சியமாகத் திகழ்வோம். காலம் இன்னும் கடந்து விடவில்லை. பாசனக் குளங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும். தூர்வாரப்படவேண்டும். இணைக்கப்பட வேண்டிய குளங்கள் இணைக்கப்பட்டு அதன் கொள்ளளவு அதிகரிக்கப்பட வேண்டும். இன்ன பிற செயற்பாடுகள் நீர்ப்பாசனத்துறையில் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


விவசாயத்துறை அமைச்சும், வன சீவராசிகள் அமைச்சும் ஒருங்கிணைந்து எமது மாவட்டத்தில் இரு துறைகளையும் அபிவிருத்தி செய்வதுடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாத கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரைப்பிரச்சினை விவசாயத்துறைக்கு வன சீவராசிகளால் ஏற்படும் பாதிப்புக்கள், குறிப்பாக யானைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் மரணச் சம்பவங்கள் தொடர்பாக இந்தத் துறைசார் இரு அமைச்சுக்களும் தமது கரிசனையை செலுத்தி அதற்கேற்ற திட்டங்களினை மேற்கொள்ள வேண்டும்.

இன்னுமொரு முக்கியமான விடயம், அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒரு கட்சியின், ஒரு கூட்டமைப்பின் அமைச்சர்கள் அல்ல, ஆழும் கட்சியின் அமைச்சர்களும் அல்ல. பாராளுமன்றப் பிரதிநிதி எனில் அவர் ஒரு கட்சி சார்பானவராகவோ, அவரது கட்சி சார்ந்த கூட்டணி சார்பானவராகவோ செயற்பட முடியும். அண்மையில் விவசாயத்துறை அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் என்ற அந்தஸ்த்துடன் வருகை தந்தார். அவர் கட்சிச் செயற்பாடுகளுக்காக கட்சிப் புனரமைப்புக்காக வருகை தரவில்லை. அப்படியெனின், அந்த வருகையின் செலவீனம் தொர்பாக எம்மால் வினா எழுப்ப முடியும். ஆனால், நான் வினா எழுப்பவில்லை. அமைச்சரவர்கள் அமைச்சர் என அந்தஸ்த்துடன் ஒரு மாவட்டத்திற்கு வருகை தரும்போது அதுவும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் பங்குபற்றும் பொழுது அது அரசாங்க நிகழ்வாக இருக்க வேண்டுமேயொழிய அரசாங்கக் கட்சியின் நிகழ்வாக இருக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த அரச நிகழ்வுகளும் எமது மாவட்டத்தில் உங்கள் அமைச்சு தொடர்பாக நi;பெறுகிறதோ, அது தொடர்பாக மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கும் அறியத் தாருங்கள். மக்களுக்கும் உங்களுக்கும் இடையே பாலமாக இருந்து மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் உங்களுக்கு உதவுவோம். பிரச்சினைகளை இனங்காண அரசாங்க அதிபர் தலைமையில்  சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும் அறிவியுங்கள். இணக்கமான சுமுகமான கலந்துரையாடல் மூலம் மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து கொள்வதற்கு சிறந்த வழிமுறை இதுவே ஆகும். அண்மையில் விவசாயத்துறை அமைச்சர் மட்டக்களப்புக்கு வந்து சில நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஊடாகவே அறியும் அளவுக்கு எம்மைத் தள்ளி விடாதீர்கள். ஏனென்றால், நியூட்டன் விதி சில வேளை இந்த நிகழ்வுகளிலும் இடம்பெற முடியும்.

இவ்விடயங்களில் நாம் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் கீழ்த் தரமான அரசியலைச் செய்யவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும், மக்கள் தொடர்பான பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்;படுவதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் காலத்தின்கட்டாயம். இது உங்கள் ஒரு அமைச்சுக்கு மாத்திரம் கூறவில்லை. சகல அமைச்சர்களுக்கும் இந்தக் குழுநிலை விவாதத்தின் ஊடாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

இறுதியாக மீன்பிடி அமைச்சு தொடர்பாக சில வார்த்தைகள் எமது நாட்டு மக்களின் பெரும்பான்மையினர்;, எமது மாவட்ட மக்களில் ஏறக்குறைய அரைவாசிப்பேர் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித்துறையையே நம்பியுள்ளனர். மீன்பிடித்துறையில் தன்னிறைவடைய வேண்டிய சகல வளங்களும் எமக்கிருக்கிறது. கடந்த கால தவறுகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து பிச்சைக்காரனின் புண்ணாக்கி இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல நான் விரும்பவில்லை. மீன்பிடித்துறையில் நாம் தன்னிறைவடைவதற்கு ஏற்ற உகந்த சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எமது கடற் பரப்பில் ஏறத்தாழ சரி அரைவாசி வட கிழக்குப் பகுதி சார்ந்ததாகும். அப்படியெனில் வடகிழக்கு சார்ந்த எமது மக்களுக்கே இந்த வளங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.

பருவகால மீன்பிடி என்று வட கிழக்கு கடற் பிரதேச மீன் வளங்கள் எவராலும் சுரண்டப்பட முடியாத அளவுக்கு எமது மீன்பிடித் துறை நியதிச் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கரை வலைப்பாடு, கரைவலை உபயோகம் பருவகால மீன்பிடியாளர்களால் பாதிக்கப்படக் கூடாது. இன்று வட கிழக்கு கடல் வளத்தின் பெரும் பகுதி தென் பகுதி மீனவர்;களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்ற கசப்பான உண்மையை நான் கூறித் தானாகவேண்டும்.

வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று காலத்தில் வட கிழக்குக் கடற் பரப்பில் ஏற்படும் காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் எந்த வட கிழக்கு மீனவராவது தெற்கு, தென் மேற்கு கட்றபரப்பில் மீன்பிடித்ததுண்டா? அவ்வாறு மீன்பிடிக்கத்தான் முடியுமா? இவற்றை நான் இனவாதியாகவோ, பிரிவினைவாதியாகவோ கூறவில்லை.

எமது மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே கூறுகின்றேன்.

மீன்பிடித்துறை தொடர்பாக, மீனவர்களின் உயிர்ப்பிரச்சினை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் தன் கவனத்தினைச் செலுத்த வேண்டும். எம் மீனவர்கள் எவரும் இனியொரு போதும் நடுக்கடலில் தத்தளித்து நாட்கணக்கில் தவிக்காத விதத்தில் அவர்களது படகுகளில் நவீன இலத்திரனியல் உபகரணங்;;களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத்திட்ட விவாத்தில் மீன்பிடித்துறை தொடர்பாக நான் உரையாற்றும் போது இத்துறையில் தன்னிறைவு கண்ட உரையினை ஆற்ற வேண்டும் என்ற ஆவலினை இங்கு பதிவு செய்கின்றேன். முக்கிய மூன்று இந்த அமைச்சுக்களின் அமைச்சர்களுக்கும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கும் காணி பகிர்ந்தளிப்பு சம்பந்தாக சில விடயங்களை கூற விளைகின்றேன். 15.06.79ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம்  41ல் திருகோணமலை மூதூரிலிருந்து கண்டி வேரகல் வரை மகாவலி பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், யுத்தகாலம் என்பதால் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி நடைபெறவில்லை. தற்போது கிரான் பிரதேச செயலகப் பிரிவில் மகாவலி பி பிரிவில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படப்போவதாக அறிகிறோம். மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே மாடுகள் மேய்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் அப்பிரதேசத்தில் உள்ளன. ஏற்கனவே மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள் அங்கு ஆக்கிரமித்திருப்பதால் வழக்கு அங்கு நடைபெறுகிறது. அதனால் அப்பிரதேசத்தை விடுத்து குடம்பிமலை, முறுத்தானை, பேரில்லாவெளி, கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனையிலுள்ள பயிர் செய்யாத, வனவளத் திணைக்களப் பிரதேசத்துக்குள் வராத பயிர் செய்யக்கூடிய தரிசு நிலங்களையும், மேட்டு நிலங்களையும் சோளம் செய்வதற்காக பிரித்துக் கொடுப்பதற்காக மகாவலி அபிவிருத்தி சபை முயற்சி செய்கிறது. அதுவும் தேசிய இன விகிதாசார அடிப்படையில், காணிகளை ஒதுக்கவுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அட்டவணை 9. நிரல் 1. பின்னிணைப்பு 2. வகை 12 உறுப்புரை 2.5ல் கூறியபடி, மாகாணங்களுக்கிடைப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களில், உதாரணமாக மகாவலித் திட்டத்தில் இலங்கையின் விகிதாசாரப்படிதான் காணிகள் வழங்கப்படவேண்டும் என்றிருக்கிறது. அந்த அடிப்படையில் இலங்கையில் சிங்களவர்கள் 76வீதம், வட கிழக்குத் தமிழர்கள் 12 வீதம், முஸ்லிம்கள் 8 வீதம், மலையகத் தமிழர்கள் 4 வீதம் இருக்கும் போது, ஏற்கனவே 10 மகாவலி வலயங்களில் 1 லட்சத்து 23630 சிங்களக் குடும்பங்களுக்கு 96.16வீதம் காணிகள் வழங்கப்பட்டது. 3068 குடும்பங்களுக்கு 2.39வீதம் காணிகள் வழங்கப்பட்டது. 1825 தமிழ் குடும்பங்களுக்கு 1.4வீதம் தான் வழங்கப்பட்டிருக்கின்றது. 76 வீதம் சிங்களவர்கள் வாழும் இந்த நாட்டில் 96வீதம் மகாவலி காணிகள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீதம் தமிழ் பேசும் வாழும் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்படும் போது அந்தப்பிரதேச மக்களுக்கு சோளம் செய்கைக்கோ விவசாயச் செய்கைக்கோ நிலங்கள் பிரித்து வழங்கப்படவேண்டும்.என தெரிவித்துள்ளார்.

 
SHARE

Author: verified_user

0 Comments: